அப்பாடா.. தலைவராக இருந்ததை விட இப்பத்தான் டபுள் சந்தோஷம்- திருநாவுக்கரசர் அசத்தல் பேட்டி!
டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான போது எத்தகைய சந்தோஷம் இருந்ததோ அதை விட இரட்டிப்பு மகிழ்ச்சி தற்போது உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. அதற்குள் அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் ராகுலுக்கு சென்றது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை கூட்டணி கட்சியுடன் பேசவே இல்லை என்பது பிரதான குற்றச்சாட்டு.
மேலும் திமுகவை கடுமையாக எதிர்க்கும் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க திருநாவுக்கரசர் தலைமையிடம் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் அமெரிக்காவில் ரஜினிகாந்தை பார்த்தது தொடங்கி ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிய திருநாவுக்கரசர் நேற்று முன் தினம் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
நல்ல முடிவு
பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் அவர் இன்று ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ராகுல் காந்தி எந்த முடிவு எடுத்தாலும் அது நல்ல முடிவாகத்தான் இருக்கும்.
உத்வேகம்
வாழ்நாள் முழுவதும் காங்கிரஸில் பணியாற்றுவேன். நான் மட்டுமல்ல என் பரம்பரையே காங்கிரஸுக்கு பணியாற்றும். டிடிவி தினகரன் தொடங்கிய கட்சி புதிய கட்சி. அக்கட்சியுடன் யாராவது கூட்டணி அமைக்க விரும்புவார்களா. எனது நீக்கத்திற்கு காரணம் சொல்ல வேண்டியதில்லை. இன்னும் முழு உத்வேகத்துடன் பணியாற்றுவேன். ராகுல் முடிவை ஏற்கிறேன்.
ப. சிதம்பரம்
புகார் காரணமாக என்னை நீக்கவில்லை. தலைவராக தேர்வு செய்யப்பட்டதை விட நீக்கப்பட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ப.சிதம்பரம் எனது நண்பர், அவர் காங்கிரஸ் தலைவர் அல்ல. எனவே என்னை நீக்கியது ப. சிதம்பரம் இல்லை.
நன்றி
ப.சிதம்பரம் நெருக்கடி கொடுத்து என்னை ராகுல் நீக்கினார் என்பது தவறு. யாருடைய நெருக்குதலையும் அவர் ஏற்கமாட்டார். எங்களுக்குள் எந்தவித மனக்கசப்பும் ஏற்படவில்லை. இத்தனை நாட்கள் என்னுடன் பணியாற்றிய தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி என்றார்.