திலகம், சிலுவை “ஓகே”.. ஹிஜாபுக்கு மட்டும் தடையா? இது பாரபட்சம் -உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்
டெல்லி: ஹிஜாப் அணிந்து செல்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், அதை தடுப்பவர்கள் பிரச்சனை செய்ய நினைப்பதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடியுள்ளார்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
குர்ஆனை மாற்றவே முடியாது.. “ஹிஜாப்” அணியாவிட்டால் மரணித்த பின் தண்டனை -உச்சநீதிமன்றத்தில் பரபர வாதம்
உச்சநீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. கடந்த 5 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
வழக்கறிஞர் ஏ.எம்.தார்
இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் தார், "1400 ஆண்டுகள் முன்பு அருளப்பட்ட குர்ஆனில் உள்ள சூராக்களில் இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின் கட்டளை எதுவாக இருந்தாலும் அது கட்டாயமாகும். அவற்றை திருத்தம் செய்ய முடியாது. குர்ஆன் என்பது அல்லாஹ்வின் உத்தரவு. அதை பின்பற்றுவது அவசியம்.
மரணத்துக்கு பின்
இஸ்லாமியர்கள் குர்ஆனை பின்பற்றுகிறார்கள். மரணத்துக்கு பின்னர் நியாய தீர்ப்பு நாளில் அது தொடர்பாக கேட்கப்படும். ஹிஜாப் விவகாரம் கவலையை ஏற்படுத்தினாலும், இந்த சிறந்த நாட்டில் அரசியலமைப்பு பாதுகாப்பை அளிக்கிறது. நாங்கள் புர்கா அணிந்து செல்ல அணிந்து செல்ல அனுமதி கேட்கவில்லை. முக்காடு போடவே அனுமதி கோருகிறோம். நம் நாட்டில் விமான நிலையங்களில் கூட வழிபட இடங்கள் உள்ளன." என்றார்.
கபில் சிபல்
இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "ஹிஜாப் என்பது அவர்களுடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஹிஜாப் அவர்களின் அங்கமாகிவிட்டது. ஆடை என்பது தனியுரிமையின் இதயம். இந்த உரிமை மீறப்படுவதற்கு அரசியலமைப்பு சாசனம் அனுமதியளிக்கவில்லை. பன்முகத்தன்மையின் அனைத்து நிலைபாடுகளையும் ஏற்றுள்ளோம். அப்படியென்றால் பொது இடத்தில் யார் வேண்டுமானாலும் ஹிஜாப் அணியலாம். யாரும் பிரச்சனை செய்ய முடியாது.
யாருக்கும் உரிமை இல்லை?
பள்ளிக்குள் செல்லும்போது ஒரு மாணவி தனது அடிப்படை உரிமைகளை மூட்டைக்கட்டிவிட வேண்டுமா? இதை தடுப்பதற்கு அவர்கள் யார்? இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் பிர்ச்சனையை உருவாக்க முயற்சித்தார்கள். அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்கினார்கள்." என்றார்.
பிரசாந்த் பூஷன் வாதம்
இவரை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார். அப்போது அவர், "ஹிஜாப் தடை என்பது பாரபட்சமானது. ஹிஜாப் தடை செய்யப்பட்டதில் எந்த நியாயமும் இல்லை. நாம் மதசார்பற்ற நிறுவனமாக இருக்கிறோம். குஜராத், ராஜஸ்தானிகள் அணியும் பாக்டி தலைப்பாகை, நெற்றி திலகம், சிலுவை போன்றவை தடை செய்யப்படவில்லை.
தடை செய்ய முடியாது
ஹிஜாப் பல ஆண்டுகளுக்கும் மேலாக மத அடையாளமாக உள்ளது. ஹிஜாப் மூலமாக மத உரிமைகளை வெளிப்படுத்துகிறார்கள். ஹிஜாபை மதம் வலியுறுத்துகிறதா அல்லது நம்பிக்கையா என்பதை கடந்து பொது ஒழுங்கை கெடுக்காமல் இருக்கும் சூழலில் அதை தடை செய்திட முடியாது." என்றார். வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் திங்கள் கிழமை விசாரணையை ஒத்திவைத்தனர்.