ஏபிவிபி வைத்த தீ.. பற்றி எரிந்த கர்நாடகா! உடுப்பி டூ உச்சநீதிமன்றம் -ஹிஜாப் சர்ச்சை கடந்து வந்த பாதை
டெல்லி: கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய மாநில விதித்த தடை தொடரும் என அம்மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் ஹிஜாப் விவகாரம் கடந்து வந்த பாதை குறித்து அலசுவோம்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டே உள்ளே மாணவிகளை அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்தது.

காவித்துண்டு
இந்த நிலையில் குந்தபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினரான ஏபிவிபி காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர்.

வன்முறை
இந்த பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி கர்நாடகாவே வன்முறைக் களமாக மாறியது. ஏராளமான கல்லூரிகளில் இரு தரப்பு மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட அவர்களுக்கு இடையே வன்முறையும் வெடித்தது. இதனால் கர்நாடகமே வன்முறைக் களமாக மாற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

முஸ்கான்
கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி மண்டியாவில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் காவி துண்டு அணிந்த மாணவர்கள் ஹிஜாபுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது முஸ்கான் என்ற ஹிஜாப் அணிந்த மாணவி அருகே ‛ஜெய்ஸ்ரீராம்' என்று கோஷமிட்டனர். இதையடுத்து அந்த மாணவி தனது கையை உயர்த்தி ‛அல்லாஹு அக்பர்' என பதில் கோஷமிட்டது இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இதனால் தமிழ்நாடு தொடங்கு இந்தியா முழுவதும் நடைபெற்ற ஹிஜாப் ஆதரவு போராட்டம் வளைகுடா, ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.

தேர்வு எழுத தடை
இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் கர்நாடகாவில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடைபெற்றனர். இதற்கு வழக்கம்போல் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததால் அவர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மாணவிகள் பொதுத்தேர்விலும் தோல்வியடைந்தனர்.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்த நிலையில் உடுப்பி மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் எனவும் கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய இருவர் அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏராளமான மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

இருவேறு தீர்ப்பு
அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளது. அதில் நீதிபதி ஹேமந்த் குப்தா கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த ஹிஜாப் தடை தொடரும் என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி சுதான்சு துலியா கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லாது என்றும் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications