தப்லிக் ஜமாத் மீதான அவதூறு.. மாரிதாஸை விரட்டும் காவல்துறை.. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!
டெல்லி: கொரோனா பரவல் விவகாரத்தில் அவதூறு கருத்து தெரிவித்த யூடியூபர் மாரிதாஸ்-க்கு எதிராக, தமிழக காவல் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். பாஜக ஆதரவாளரான இவர், யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பாஜக ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
மறைந்த முன்னாள் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மரணம், காஷ்மீர் தொடர்பாக சர்ச்சையாக ட்விட்டரில் பதிவிட்டது என பல்வேறு விவகாரங்களில் இவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யூடியூபர் மாரிதாஸ் மீதான 2ஆவது வழக்கும் ரத்து.. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மாரிதாஸ் சர்ச்சை
அதேபோல் தமிழ்நாட்டின் பல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் குறித்தும் இவர் வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. சில பத்திரிகையாளர்கள் இவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்ததில், குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
தப்லிக் ஜமாத் பற்றிய சர்ச்சை
இதனிடையே 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் முதல் அலை பரவல் தொடங்கியது. இதன் காரணமாக இந்தியாவில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தப்லீக் ஜமாத் அமைப்பினர் தான் காரணம் என வீடியோ ஒன்றை யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாரிதாஸ் கைது
இதனைத்தொடர்ந்து மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் அந்த வீடியோவுக்கு எதிராக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஏப்ரல் 4ம் தேதியன்று 4 பிரிவுகளின் கீழ் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் அடிப்படையில், மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ்-க்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழ்நாடு காவல்துறை தரப்பில் கொரோனா பரவல் விவகாரத்தில் அவதூறு கருத்து தெரிவித்த யூடியூபர் மாரிதாஸ்-க்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.