நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
தேர்தல் நெருங்குவதால் சாமானியர்களுக்கு பலனளிக்கும் விதமாக பல புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(ஜன.31) தொடங்க உள்ள நிலையில், இக்கூட்டத்தொடரை முழு ஒத்துழைப்புடன் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன்று நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதியில் அந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும். அந்த வகையில் நாளை இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் காலை நடைபெறும் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். இந்த கூட்டம் நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடைபெறுகிறது. நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது இதுதான் முதல் முறை.
இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கையில் 2022-2023ம் ஆண்டின் வளர்ச்சி, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். இதற்கு அடுத்த நாள் அதாவது பிப்ரவரி 1ம் தேதியன்று நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு.. பிப்.,1ல் மத்திய பட்ஜெட்.. எகிறும் எதிர்பார்ப்பு!
இரண்டு அமர்வு
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், அதன் பின்னர் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இக்கூட்டத்தொடருக்கு அடுத்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுதான் என்று சொல்லப்படுகிறது. அதேபோல தேர்தல் இருப்பதால் பல புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சாமானியர்களுக்கு சாதகமாக சில அறிவிப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்புகள்
நீண்ட நாட்களாக வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீடித்து வருகிறது. எனவே இதுகுறித்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.8% ஆக இருக்கும் என்று ஐநாவின் ஆய்வறிக்கை கூறியுள்ள நிலையில் இதனை சமாளிக்கும் விதமாக புதிய வேலைவாய்ப்புகள், தொழில் முதலீடுகள் ஆகியவை குறித்த அறிவிப்புகள் இதில் இடம்பெற்றிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இந்த கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களில் கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரம் கிடையாது.
பிரதமர் உரை
பட்ஜெட் அறிக்கை வாசிக்கப்பட்ட பின்னர் அடுத்த நாள் அதாவது பிப்ரவரி 2ம் தேதி குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கப்படும். இரு அவைகளிலும் இந்த விவாதங்களுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து உரையாற்றுவார். இந்நிலையில் இந்த கூட்டத்தொடரை அமைதியாகவும், அனைவரின் ஒத்துழைப்புடன் கொண்டு செல்ல அனைத்துக்கட்சி கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்னர் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பு
பிபிசி ஆவணப்பட, ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை, எல்ஐசி பங்குகள் போன்ற விவகாரங்களை பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. இத்துடன் நீட் தேர்வு, மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகிய விவகாரங்களை திமுக எழுப்ப திட்டமிட்டுள்ளது. எப்படி இருப்பினும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கத்தை விட அதிகமான பரபரப்புடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.