இன்ஸ்டாகிராம் பயங்கரம்.. 2 இளைஞர்கள் கொடூரக் கொலை.. அதிக 'லைக்ஸ்' பெற்றதால் பெண் ஆத்திரம்
டெல்லி: இன்ஸ்டாகிராமில் யார் அதிகம் 'லைக்ஸ்' வாங்குவது என்ற போட்டியில் 2 இளைஞர்கள் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு இளம்பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை தான் சீரழித்து வருகிறது என எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில், கொலை பாதகம் வரையிலும் இது கொண்டு செல்லும் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல உதாரணமாக உள்ளது.

இன்ஸ்டாகிராம் எனும் ஆபத்து..
இன்றைய பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் கையில் பாடப்புத்தகங்கள் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது. ஆன்லைன் வகுப்புக்காக வாங்கப்பட்ட இந்த செல்போன்கள், தற்போது அதை தவிர மற்ற அனைத்து விஷயங்களுக்கும் பயன்பட்டு வருகின்றன. அதிலும் இன்ஸ்டாகிராமில்தான் இப்போது பல இளைஞர்கள் மூழ்கியுள்ளனர். தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போகும் வரை, இன்ஸ்டாகிராமே கதியென இருக்கும் இளைஞர்களும் ஏராளம். இன்ஸ்டாகிராமில் தங்களுக்கு கிடைக்கும் ஒன்றுக்கும் பயன்படாத லைக்ஸ்களுக்காக இவர்கள் செய்யும் செயலை பார்க்கும் போது கோபத்தை விட பரிதாபமே வருகிறது.

இன்ஸ்டாகிராம் 'செலிபிரிட்டி'
இந்நிலையில், இந்த இன்ஸ்டாகிராம் லைக்ஸ்களை மையமாக வைத்து உருவான மோதல், கொலையில் சென்று முடிந்திருக்கிறது. டெல்லியின் பிசிஆர் பகுதியை சேர்ந்தவர் தேவகி (17). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த சிறுமி இன்ஸ்டாகிராமில் அதிக வீடியோக்களை பதிவிட்டு வருபவர் எனத் தெரிகிறது. இவரது வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு எனக் கூறப்படுகிறது. இதனால் இவர் வீடியோக்களுக்கு அதிக அளவில் லைக்ஸும் வரும் எனக் கூறப்படுகிறது.

'லைக்ஸ்' வாங்குவதில் தகராறு
இதனிடையே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் (18), நிக்கில் (28) ஆகியோரும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களின் வீடியோக்களுக்கும் அதிக லைக்ஸ் வரும் எனத் தெரிகிறது. இதனால் யார் வீடியோக்களுக்கு அதிக லைக்ஸ் வருகிறது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், சமீபகாலமாக அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக திட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு வந்தனர். இதில் அவர்களுக்கு இடையேயான பகை அதிகரித்து வந்துள்ளது.

'ஸ்கெட்ச்' போட்டு கொலை
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சாஹில், நிக்கில் ஆகியோரை செல்போனில் அழைத்த தேவகி, இனி நமக்குள் பிரச்சினை வேண்டாம்; சமாதானமாக போய்விடலாம் எனக் கூறியுள்ளார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். நாம் சமாதானமாவதை கொண்டாடுவதற்காக வெளியே எங்கேயாவது செல்லலாம் என தேவகி கூறியுள்ளார். இதனை நம்பிய சாஹிலும், நிக்கிலும் தேவகி கூறிய இடத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். அப்போது தேவகியுடன் இருந்த ஆண் நண்பர்கள் 2 பேர், சாஹிலையும், நிக்கிலையும் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்களை குத்தினர். இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேவகி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications