இலங்கை செல்லும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்- மலையக தமிழர்களின் ‘நாம் 200’ நிகழ்வில் பங்கேற்பு!
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் 3 நாட்கள் பயணமாக இலங்கை செல்கிறார். இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கை சென்று குடியேறிய 200-வது ஆண்டு நிகழ்வுகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் நவம்பர் 3-ந் தேதி வரை இலங்கை பயணம் மேற்கொள்கிறார். இன்று இலங்கை செல்லும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொழும்பில் 2 நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

இலங்கைக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் சென்று குடியேறிய 200-ம் ஆண்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொழும்பில் "நாம் 200" என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். கொழும்பில் இந்தியா- இலங்கை வர்த்தக உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதிலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.
பின்னர் தமிழர்கள் தாயக நிலப் பகுதியான திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் செல்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். திருகோணமலையில் எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைக்கும் அவர், இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் பார்வையிடுகிறார்.
யாழ்ப்பாணம் செல்லும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கும் எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றை திறந்து வைக்கிறார். மேலும் யாழ்ப்பாண பொது நூலகம், யாழ்ப்பாண கலாசார மையம் ஆகியவற்றையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார். இந்த பயணத்தின் போது வழிபாட்டு தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட உள்ளது.
இப்பயணத்தில் பவுத்த புனித தலமான தலதா மாளிகை, அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதி மற்றும் தமிழர்களின் வழிபாட்டு தலங்களான திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோவில், நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆகியவற்றையும் பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் இலங்கை செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றார். தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை செல்கிறார்.
இந்த பயணத்தின் போது தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை நிர்மலா சீதாராமன் சந்திப்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளாரா? என்பதும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications