நாட்டிலேயே முதல்முறை.. பளபள கண்ணாடி நடைபாதையுடன்.. ரூ.1082 கோடியில் கேபிள் பாலம்.. கிருஷ்ணா நதியில்
டெல்லி: ஆந்திரா - தெலங்கானா மாநிலங்களை இணைக்கும் வகையில் கிருஷ்ணா நதியின் குறுக்கே இந்தியாவின் முதல் கேபிள் பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாட்டிலேயே முதன் முறையாக கிருஷ்ணா நதி மீது ஆந்திரா - தெலங்கானா மாநிலங்களை இணைக்கும் வகையில் கேபிள் பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வழங்கியுள்ளது.
ரூ.1,082.56 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கேபிள் பாலத்தின் கட்டுமான பணிகள் 30 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறை
நாட்டிலேயே முதன் முறையாக கிருஷ்ணா நதி மீது 3 கி.மீ தூரத்திற்கு கேபிள் பாலம் அமைக்கப்படவுள்ளது. ஆந்திரா - தெலங்கானா மாநிலங்களை இந்த பாலம் இணைக்க உள்ளது. தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சோமசீலா பகுதியில் தொடங்கும் இந்த கேபிள் பாலம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், ஆத்மகூரில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி நடைபாதை
நல்லமல்லா வனப்பகுதி அருகே அமைக்கப்படவுள்ள இந்த பாலம் 3 கி.மீ தூரத்திற்கு கண்ணாடி நடைபாதையை கொண்டிருக்கும். எனவே, இதில் நடந்துசெல்வோர் மிக அற்புதமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். பச்சை பசேல் என இருக்கும் வனப்பகுதிகள், கிருஷ்ணா நதியின் அழகு, ஸ்ரீசைலம் அணைக்கட்டு, மலைப்பகுதி என அனைத்தையும் ஒரே சமயத்தில் இந்த பாலத்தின் மூலம் கண்டு ரசிக்கலாம். மேலும், கோபுர வடிவ கேபிள்கள் இரவில் சிறப்பு மின் அலங்காரம் போன்றவையும் செய்யப்படும்.
நிதின் கட்கரி பதிவு
புதிய கேபிள் பாலத்தை சர்வதேச தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கிருஷ்ணா நதி மீது 3 கி.மீ. தூரத்திற்கு இந்த கேபிள் மேம்பாலம் அமையவுள்ளது. 30 மாதங்களில் இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.
பயண தூரம் குறையும்
இந்த பால கட்டுமானப் பணி முடிவடைந்தால், உலகிலேயே 2-வது கேபிள் பாலமாகவும், நாட்டிலேயே முதல் கேபிள் பாலமாகவும் பெயர் பெறும் என பதிவிட்டுள்ளார் இந்த கேபிள் பாலம் பணிகள் நிறைவடைந்தால், திருப்பதி - ஹைதராபாத் இடையே சாலை போக்குவரத்தில் பெரும் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி - ஹைதராபாத் இடையிலான பயண தூரம் சுமார் 80 கி.மீ வரை குறையும் என்பது பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாள் கோரிக்கை
இதுநாள் வரை தெலுங்கானா மக்கள் மகாநந்தி, அஹோபிலம், திருப்பதி போன்ற கோவில்களுக்கு செல்ல கர்னூல் வழியாக மட்டுமே பயணிக்க வேண்டியுள்ளது. அதேபோல் சோமசிலா பகுதியில் இருந்து கிருஷ்ணா நதியின் குறுக்கே படகில் சென்று இந்த இடங்களுக்குச் செல்வதே மற்றொரு வழியாகும். அவ்வப்போது படகில் செல்வோர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதன் காரணமாக தூரத்தை குறைக்க ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என 2007ம் ஆண்டு முதல் இரு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு, பலனளிக்கும் வகையில் கேபிள் பால அறிவிப்பு வெளியாகியுள்ளது.