ஜேபி நட்டா மேலயா கல்வீசி தாக்குதல் நடத்துறீங்களா? இதோ நானே வருகிறேன்....மே.வங்கம் செல்லும் அமித்ஷா
டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மீது சரமாரி கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் மேற்கு வங்கத்துக்கு சுற்றுப் பயணம் செல்ல உள்ளார்.
மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களம் அனலைக் கிளப்பி வருகிறது.

ஜேபி நட்டா மீது தாக்குதல்
பாஜக தலைவர்கள் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 2 நாட்களாக அம்மாநிலத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது பாதுகாப்பு வாகனம் மீது சரமாரி கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. பெரிய செங்கல் ஒன்றும் எறியப்பட்டது என்பது பாஜகவின் புகார்.

பாஜக தலைவர்கள் அதிர்ச்சி
இந்த சம்பவத்தால் பாஜக தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஜேபி நட்டா மீதான இந்த தாக்குதலுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பாஜகவின் நாடகம்
ஜேபி நட்டா மீதான தாக்குதல் என்பது பாஜகவினரே திட்டமிட்டு நடத்திக் கொண்ட நாடகம் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த பதற்றங்களுக்கு இடையே அமித்ஷா, மேற்கு வங்கம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மே.வங்கத்தில் அமித்ஷா பயணம்
வரும் 19-ந் தேதியன்று மேற்கு வங்க மாநிலத்தில் அமித்ஷா சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் அமித்ஷா பயணத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்துவார்களா? என்கிற பதற்றம் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications