"நீதிபதிகள் தேர்தலை சந்திப்பதில்லை எனவே..!" கொலீஜியம் பற்றி பாயிண்ட் பாயிண்டாக சொன்ன கிரண் ரிஜிஜூ
டெல்லி: டெல்லி பார் அசோஷியேஷன் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் அவர் நீதிபதிகள் நியமனம் குறித்துப் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் இருப்பதால் நீதிபதிகள் நியமனத்தில் இப்போது இருப்பதை காட்டிலும் முக்கிய பங்கு அரசுக்கு இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இப்போது கொலீஜியம் முறைப்படியே நீதிபதிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளைக் கொண்ட குழு தான் இந்த கொலீஜியம் குழுவாகும்.
நீதிபதிகள் தேர்வுக் குழு என்ற கொலீஜியம் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் இடம் பெற்றிருப்பார்கள். இந்த கொலீஜியம் குழுவே நீதிபதிகளைப் பரிந்துரைக்கும்.
வெடித்து கிளம்பும் கொலீஜியம் பஞ்சாயத்து! ஆட்சியா? ரௌடியிசமா? பிரதமருக்கு சு.சாமி நறுக் கேள்வி
தேர்தல்
இருப்பினும், இந்த முறையை மாற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் தேர்தலில் போட்டியிடத் தேவையில்லை என்ற போதிலும் தங்கள் செயல்கள், மற்றும் தீர்ப்புகள் மூலம் மக்கள் பார்வையிலேயே எப்போதும் உள்ளதாக அவர் தெரிவித்தார். டெல்லி பார் அசோஷியேஷன் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தான் அவர் நீதிபதிகள் நியமனம் குறித்துப் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கிரண் ரிஜிஜு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மக்கள் உங்களையும் உங்கள் செயல்பாடுகளையும் பார்த்துத் தீர்ப்பு சொல்கிறார்கள். உங்கள் தீர்ப்புகள், உங்கள் பணி செயல்முறை, நீங்கள் எப்படி நீதி வழங்குகிறீர்கள். என்பதையெல்லாம் வைத்து அவர்கள் மதிப்பிடுகிறார்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் தங்கள் கருத்துகளைக் கூறுகிறார்கள். அந்த காலத்தில் தலைவர்கள் மட்டுமே மேடைகளில் பேசும் சூழல் இருந்தது... ஆனால், அந்த நிலை இப்போது முற்றிலுமாக மாறியுள்ளது. அனைவரும் தங்கள் கருத்துகளைக் கூறுகிறார்கள்.
தொடர முடியாது
இதனால் நீதிபதிகளும் கூட சமூக வலைத்தளங்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். இதை எப்படிக் கட்டுப்படுத்துவது? இப்போது, சமூக வலைத்தளங்களில் இதற்குப் பதிலளிக்க முடியாது. இதைத் தடுக்க உறுதியான ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இது குறித்து நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இதற்கான தீர்வும் உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இங்குப் பல மாற்றங்கள் நடந்துள்ளன. எனவே, தற்போது இருக்கும் அனைத்து அமைப்பும் கேள்விக்கு உட்படுத்தாமல் தொடரும் என்று நினைப்பது தவறாகும்..
மாற்றம் தேவை
மாறிவரும் சூழ்நிலையே தேவையான மாற்றங்களை முடிவு செய்கிறது. இதன் காரணமாகவே அரசியலமைப்புச் சட்டத்தை நாம் நூறு முறைக்கு மேல் திருத்த வேண்டியிருந்தது" என்று தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாக நாடாளுமன்றம் இருக்கிறது. எனவே, நீதிபதிகள் நியமனத்தில் இப்போது இருப்பதை காட்டிலும் முக்கிய பங்கு அரசுக்கு இருக்க வேண்டும் என நினைப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
வெளிப்படைத்தன்மை
நாட்டின் சட்டத்துறை அமைச்சரே இப்படிக் கூறியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போதைய கொலீஜியம் நியமன முறைமையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கிரண் ரிஜிஜு பல முறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்ற முடியும் என்றாலும், அதை ஆராய்வது நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் காட்டமான கருத்தையும் கூறியிருந்ததது.
நீதிபதி காட்டம்
அதேபோல இது குறித்து நீதிபதி எஸ்.கே.கவுல் கூறுகையில், "நாளையே வந்து மக்கள் அரசியலமைப்பின் அடிப்படை குறித்துச் சொல்வார்கள்.. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் எந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும், எதைப் பின்பற்றக்கூடாது என்று சொல்லத் தொடங்கினால் அது பெரும் சிதைவுக்கு வழிவகுக்கும்" என்று கூறினார். வரும் நாட்களில் இது குறித்த விவாதம் இன்னும் பெரியதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.