260 கோடி பார்வையாளர்கள்.. 22 யூட்யூப் சேனல்களை மொத்தமாய் முடக்கிய மத்திய அரசு! என்ன காரணம் தெரியுமா?
டெல்லி : பிரபல செய்தி சேனல்களின் லோகோக்கள் மற்றும் டெம்ப்லேட்களை பயன்படுத்தி இந்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக 260 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்ட 22 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு 2 ட்விட்டர் கணக்குகளை மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.
மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபடும் வகையில் செயல்படும் யூட்யூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை முடக்கி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தவறான பிரச்சாரங்களை சில யூட்யூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களில் பிரபல செய்தி சேனல்களின் லோகோக்கள் மற்றும் டெம்ப்லேட்களை பயன்படுத்தி பரப்பி வருவது கண்டறியப்பட்டது

யூட்யூப் சேனல்கள் மீது புகார்
இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதத்தினரை மத்திய அரசுக்கு எதிராக தூண்டி விட முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக சேனல்களின் செய்தி வாசிப்பாளர்களின் படங்கள் உட்பட, இந்த செய்தி உண்மையானது என்று பார்வையாளர்களை தவறாக வழிநடத்துவதாகவும் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் தான் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.

சேனல்கள் முடக்கம்
2021ஆம் ஆண்டின் புதிய ஐடி விதிகளின் கீழ் இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூன்று ட்விட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி வலைத்தளத்தையும் முடக்கியுள்ளது என்றும் பிஐபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த யூடியூப் சேனல்கள் ஏன் தடுக்கப்பட்டன என்ற விவரங்களையும் அரசாங்கம் வெளியிட்டது. இந்த சேனல்கள் காட்டும் கண்டெண்டுகளின் ஸ்கிரீன்ஷாட்களையும் வெளியிட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை
இந்த யூடியூப் சேனல்கள் இந்தியாவில் உள்ள பிரபல டிவி செய்தி சேனல்களின் லோகோக்கள் மற்றும் ப்ரேக்கிங் நியூஸ் டெம்ப்லேட்கள், இசை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பார்வையாளர்களை தவறாக வழிநடத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், 22 யூடியூப் சேனல்களுடன் மூன்று ட்விட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளத்தையும் முடக்கியுள்ளது. 2021 ஐடி விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு
சுமார் 260 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருந்த சேனல்கள், தேசிய பாதுகாப்பு, இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பிய புகாரில் தான் தடை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சமூக ஊடகங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும், வைரலை அதிகரிக்க வீடியோக்களின் தலைப்பு மற்றும் தம்ப்நைல் அடிக்கடி மாற்றப்படுவதாகவும் கூறப்பட்டது.

சேனல்களின் பட்டியல்
சில சந்தர்ப்பங்களில், முறையான இந்தியாவுக்கு எதிரான போலிச் செய்திகள் பாகிஸ்தானில் இருந்து வெளியாவதும் கவனிக்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏஆர்பி நியூஸ், ஏஓபி நியுஸ், எல்டிசி நியூஸ், சர்காரி பாபு, எஸ் எஸ் ஜோன் இந்தி, எக்ஸாம் ரிபோர்ட் உள்ளிட்ட 18 இந்திய யூட்யூப் சேனல்களும், துனியா மேரி ஆகி, குலாம் நபி மட்னி, ஹகூகுவாவாட் டிவி உள்ளிட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த யூட்யூப் சேனல்களும் இந்த பட்டியலில் உள்ளன.












Click it and Unblock the Notifications