இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி, குழந்தைகளுக்கு வேக்சின், எப்போது தொடங்கும்? மத்திய அமைச்சர் பதில்
டெல்லி: இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்த பிறகு, நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் எட்டிப் பார்த்துள்ள நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது ஆறுதல் அளித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கோவிட்டுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் கொடுப்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ்
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் மீண்டும் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 100 சதவீத மக்கள் தடுப்பூசி போடவேண்டும் என்பதற்காக அந்தந்த மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

24 மணிநேரத்தில் கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 391 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 8,612 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 99,976 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 3,40,45,666 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,20,024 பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் 52,47,206 செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 73,67,230 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 79,36,40,293 முதல் தடுப்பூசியும், 46,38,65,221 இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. அதாவது ஒரு கோடியே 25 லட்சத்திற்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆலோசித்து குழந்தைகளுக்கு தடுப்பூசி
இந்நிலையில் இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டோருக்கும், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது குறித்தும், ஒமிக்ரான், டெல்டா போன்ற புதிய வைரஸ் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற பூஸ்டர் டோஸ் போடுவது குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்ககப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா மக்களவையில் தெரிவித்தார். மக்களவையில் நடைபெற்ற விவாகத்தில் கோவிட் 19க்கு எதிரான பூஸ்டர் டோஸ் குறித்தும், குழந்தைகளுக்கு தடுப்ச போடப்படுவது குறித்தும் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார். தமிழகத்தில் இன்று 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 759 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மேலும் கொரானா பாதிப்பால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை 36,513 ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications