இதை செய்தால் இந்தியா ஏழை நாடாக இருக்காது.. பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் ஐடியா!
டெல்லி: நாட்டில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை நவீனப்படுத்த அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசனை செய்து பிரதமர் மோடி திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை ஒட்டி நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பிரதமர் மோடி, நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

பிரதமர் மோடி பேச்சு
மேலும், ''இந்த பள்ளிகளில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான கற்றலை மையப்படுத்தி கற்பித்தல் இருக்கும். ஸ்மார்ட் வகுப்பறைகள், லேப்கள், நூலகங்கள், விளையாட்டுகளுக்கான வசதிகள் ஆகியவை இருக்கும். புதிய மாடல் பள்ளிகள் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் நன்மை பெறுவார்கள்'' என்று தெரிவித்தார்.

பெரிய கடலில் சிறு துளி போன்றதே
இந்த நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்றார். மேலும், பிரதமர் மோடி நாடு முழுவதும் பள்ளிகளை மேம்படுத்த விரிவான திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தினார். இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது பேட்டியின் போது கூறியதாவது:- ''பிரதமர் மோடியின் அறிவிப்பு சிறப்பானது. ஆனால், வெறும் 14,500 பள்ளிகள் நவீனப்படுத்தப்படும் என்பது பெரிய கடலில் சிறு துளி போன்றதே ஆகும்.

உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற..
இந்த விகிதத்தில் சென்றால் நாட்டில் மொத்தம் உள்ள 10.5 லட்சம் பள்ளிகளை மேம்படுத்த 70 முதல் 80 ஆண்டுகள் தேவைப்படும். நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் நவீனப்படுத்துமாறு நான் பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல தரமான இலவச கல்வியை உறுதி செய்யாமல் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியா மாற முடியாது. உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவை மாற்ற பல்வேறு சீர்திருத்தங்கள் தேவை என்று நான் அடிக்கடி கூறிவருகிறேன்.

இந்தியா ஏழை நாடாக இருக்காது
அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவசக்கல்வி உறுதி செய்யப்படாமல் இந்தியாவால் முன்னேற்றம் அடைய முடியாது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பெரும் தவறு நடந்தது. நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் மூலை முடுக்கிலும் நல்ல தரமான கல்வி மற்றும் பள்ளிகளை உறுதி செய்திருக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைவரும் படித்தவர்களாக இருந்தால் இந்தியா ஏழை நாடாக இருக்காது'' என்றார்.

''மேக் இந்தியா நெ.1''
குஜராத் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு அங்கு தற்போது தீவிர பிரசாரத்தை தொடங்கியிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தனது கட்சியை தேசிய அளவில் கொண்டு போய் சேர்க்க முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக ''மேக் இந்தியா நெ.1'' என்ற பிரசார கோஷத்தை தனது சொந்த மாநிலமான அரியானாவில் இருந்து நாளை தொடங்கி வைக்க இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications