குடியரசுத் தலைவர் தேர்தல்.. இரு தத்துவங்கள், இரு கோட்பாடுகள் இடையிலான போட்டி.. திருமா அதிரடி!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலை இரு தத்துவங்கள், இரு கோட்பாடுகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியாக பார்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்கு வராத திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர்.. காரணம் என்ன? - ஜெயக்குமார் பரபர விளக்கம்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி அறிவித்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வேலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின.
வேட்பாளர்கள் யார்?
இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.
வேட்புமனுதாக்கல்
இதனைத்தொடர்ந்து பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு, கடந்த 24ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா, அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத், தம்பிதுறை ஆகியோர் பங்கேற்றனர்.
யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுதாக்கல்
இந்த நிலையில் இன்று பகல் 12.05 மணிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஜெயராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், திமுக சார்பில் திருச்சி சிவா, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, கோவை செழியன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமாராவ், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருமாவளவன் கருத்து
இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்லாமியர் என்ற அடையாளத்துடன் அப்துல் கலாமையும், தலித் என்ற அடையாளத்துடன் ராம்நாத் கோவிந்தையும், பழங்குடியினர் என்ற அடையாளத்துடன் திரெளபதி முர்முவையும் வேட்பாளராக நிறுத்துகிற நிலைப்பாட்டை தொடர்ந்து பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செய்து வருகின்றன.
ஆனால், அதற்கு நேர்மாறாக கொள்கை அடிப்படையிலே வேட்பாளர்களை நிறுத்துவது, ஆதரிப்பது என்கிற முடிவை காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், டிஆர்எஸ், விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவெடுத்திருக்கிறோம். இது இரண்டு தத்துவங்கள், இரண்டு கோட்பாடுகளுக்கு இடையில் நடைபெறுகிற ஒரு போட்டியாக பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.