நாம் அனைவரும் இந்துக்கள்தான்.. தியாகத்தையே ஆர்.எஸ்.எஸ் கற்றுக்கொடுக்கிறது: மோகன் பகவத் ஓபன் டாக்!
டெல்லி: அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதான நோக்கம் என்றும் நாம் அனைவரும் இந்துக்கள்தான் என்றும் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மோகன் பகவத் சென்றுள்ளார்.
தனது சுற்றுப்பயனத்தின் முதல் நாளான இன்று ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது மோகன் பகவத் கூறியதாவது:-

நாட்டுக்காக தியாகம் செய்வதற்கே
நமது சமூகத்தை ஒழுங்குபடுத்துவதே சங் அமைப்பின் நோக்கம் ஆகும். அதன் மூலமே இந்தியா முழு வளர்ச்சி அடையும். சுயநலத்தை தியாகம் செய்து விட்டு நாட்டுக்காக தியாகம் செய்வதற்கே ஆர்.எஸ்.எஸ் கற்றுக்கொடுக்கிறது. இந்து மற்றும் இந்தியா என்பது ஒரே மாதிரியான புவியியல் கலாசார அடையாளம் ஆகும். எனவே நாம் அனைவரும் இந்துக்கள்தான்.

சக்திவாய்ந்தவராக மாறுவார்கள்
ஜப்பான், கொரியா, இந்தோனேசியா உள்பட பல வெளிநாடுகளுக்கு சென்ற நமது முன்னோர்கள், இதே கொள்கைகளைத்தான் அங்கும் பரப்பினர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கிய இந்தியா, தனது மனிதாபிமானத்தை காட்டியது. அதேபோல், நெருக்கடியான நிலையில் சிக்கிய இலங்கைக்கும் துணையாக நின்றது. இந்தியா வல்லரசாக மாறும் போது ஒவ்வொரு குடிமகனும் சக்திவாய்ந்தவராக மாறுவார்கள்'' என்றார்.

இஸ்லாமிய தலைவர்களை
சமீப நாட்களாக இஸ்லாமிய தலைவர்களை மோகன் பகவத் சந்தித்து பேசி வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த மாதம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரோஷி மற்றும் டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அலிகார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் உத்தின் ஷா, முன்னாள் எம்.பி ஷாகித் சித்திக் மற்றும் தொழில் அதிபர் சையத் ஷீர்வானி ஆகியோரையும் மோகன் பகவத் சந்தித்து பேசியிருந்தார்.

இமாம் அமைப்பின் தலைவர்
இந்த சந்திப்பு குறித்து பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி, நாட்டில் தற்போது நிலவும் சூழல் தனக்கு கவலை அளிப்பதாகவும் தற்போதுள்ள சூழல் மிகவும் தவறானது. ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையுடன்தான் நாடு முன்னேற முடியும் என்று மோகன் பகவத் கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான், டெல்லியில் உள்ள முக்கிய மதகுருவான அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸியை சந்தித்துப் பேசினார். மோகன் பகவத் இஸ்லாமிய தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது.












Click it and Unblock the Notifications