வரும் ஜுன் மாதத்திற்குள் 30 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி.. அதிரடியில் களமிறங்கிய அரசு..!
தடுப்பூசியை செலுத்துவதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது
டெல்லி: கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு இறங்கி வருகிறது.. பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொள்ள, அதன் ஒரு பகுதியாக வாக்குச் சாவடிகள் முதல் கல்யாண மண்டபம் வரை இடங்களை தயார் செய்யும் முயற்சியில் இறங்கி வருகிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.. அதேபோல, இந்த தடுப்பு மருந்து எப்போது வர வாய்ப்புள்ளது? என்கிற கேள்வியும் ஆர்வமாக எழுந்து வருகின்றன.
எப்படியும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 200 முதல் 300 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தயாராக இருக்கும் என்று ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியூட் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திய பின்பும், 2 மாதங்களுக்கு பிறகு தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்று நிபுணர்கள் சொல்லி வந்தாலும், தடுப்பூசியை செலுத்தும் பணிகளுக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
3 கொரோனா தடுப்பூசிகள் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் நிலையில், இந்த தடுப்பூசியை செலுத்த போதுமான அளவுக்கு இடவசதிகளை சுகாதாரத்துறை செய்து வருகிறது. இதற்காக கல்யாண மண்டபங்கள், பூத் சாவடிகளை தயார் செய்யும் பணி நடக்கிறது. தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த, தேர்ந்தெடுக்கப்படும் இடம் விசாலமானதாக இருக்க வேண்டும் என்பதாலேயே இத்தகைய இடங்கள் தேர்வாகி வருகின்றன.. அதாவது குறைந்தது 3 ரூம்களாவது இருக்க வேண்டுமாம்.
முதன்முதலாக.. நர்ஸுக்கு அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.. வைரலாகும் போட்டோ
வரும் ஜூன் மாதத்திற்குள் 30 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போடவும் திட்டமிடப்பட்டு வருகிறது, எனவே அதற்கு தேவையான தடுப்பூசிகளை சேமித்து வைப்பது, போக்குவரத்து, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து சம்பந்தமான நடவடிக்கைகளை அதிகாரிகள் கையில் எடுத்து வருகின்றனர்..
சுகாதாரத் துறை மற்றும் முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் உட்பட்ட பிற நோய் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு இந்த முதற்கட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது!