60% அதிக பாதிப்பு ஏற்படுத்தும் டெல்டா பிளஸ் கொரோனா.. அறிகுறிகள் என்ன? எப்படி தப்பிப்பது?
டெல்லி: உருமாற்றம் அடைந்த கொரோனாவான டெல்டா காரணமாகத்தான், இந்தியாவில் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் அது இப்போது கட்டுக்குள் வந்த நிலையில், டெல்டா உருமாற்றம் அடைந்துள்ளது.
Recommended Video
டெல்டா வகை கொரோனாவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 ஆக மாறி உள்ளது. இந்த B.1.617.2.1 கொரோனா டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படுகிறது.
இந்த டெல்டா + வகை கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்க கூடிய ஆபத்து உள்ளதாக வைரலாஜி மருத்துவரும், சார்ஸ் கோவிட் ஜீனோம் ஆராய்ச்சி குழுவின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் ஷாஹித் ஜமீல் எச்சரித்துள்ளார்.
10 நாடுகள்
டெல்டா பிளஸ் வேகமாக பரவக்கூடியதாக இருக்குமா? எந்த மாதிரி அறிகுறிகளை காட்டும் என்பது போன்ற பல சந்தேகங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. இந்தியா உட்பட 10 நாடுகளில் டெல்டா பிளஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று கூறியிருந்தார். அவர் கூறுகையில், வழக்கமான டெல்டா உருமாறிய கொரோனாவைத் தவிர இந்தியாவில் 22 க்கும் மேற்பட்ட டெல்டா பிளஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
பிற நாடுகள்
அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றிலும் டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில், டெல்டா பிளஸ் 22 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 16 கேஸ்கள் ரத்னகிரி மற்றும் ஜல்கான் (மகாராஷ்டிரா) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
மருத்துவர் கருத்து
டெல்டா பிளஸ் K417N எனப்படும் மியூடேஷன் அதாவது பிறழ்வைக் கொண்டுள்ளது. கோவிட் -19 இன் 'டெல்டா பிளஸ்' எவ்வளவு ஆபத்தானது, அதன் அறிகுறிகள் என்னவாக இருக்கும்? என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உயிர் வேதியியல் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் சுப்ரதீப் கர்மக்கர் கூறுகையில், புதிய டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வேகமாக பரவக் கூடியது.
வேகமாக பரவக் கூடியது
டெல்டா பிளஸ், ஆல்பா வேரியன்டை விட 35-60% அதிக தொற்று ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது. வேகமாக பரவக் கூடியது என்கிறார்கள். இந்தியாவில் இந்த எண்ணிக்கை இப்போது வரை மிகக் குறைவு. எனவே, இப்போதைக்கு கவலைப்பட ஒன்றுமில்லை.
டெல்டா பிளஸ் அறிகுறிகள்
ஒவ்வொரு வகை கொரோனா உருமாற்றமும் ஒவ்வொரு வகை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா வகையால் 2வது அலை ஏற்பட்டது. அந்த வகை வைரஸ், நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை அதிகரித்தது. ஆனால் டெல்டா பிளஸ் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் அதன் அறிகுறி எப்படி இருக்கும் என்பது பற்றி இப்போதைக்கு உடனடியாக தகவல் இல்லை.
தப்பிக்க தடுப்பூசி போடுங்கள்
அதேநேரம், நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நிறைய பாதுகாப்பை அளிக்கிறது. தகுதியுள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி பெற வேண்டும். இது நோயின் தீவிரம், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் மற்றும் இறப்பு ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இவ்வாறு அந்த டாக்டர் தெரிவித்தார்.