சூரிய கிரகணம்.. பல பிரபல கோவில்களில் நடையடைப்பு.. உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோவில் திறந்தே உள்ளது
டெல்லி: பகுதி சூரிய கிரகணத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள பல கோவில்களில் நடை அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில், கிரஹண காலத்தில் கூட பக்தர்கள் தரிசிக்க முடியும்.
இன்றைய சூரிய கிரகணத்தின் போதும் மகாகாலேஸ்வரர் கோயில் திறந்திருக்கும். உஜ்ஜயின் கோவிலுள்ள சிவபெருமான் காலத்தின் ஈஸ்வரன் என பூஜிக்கப்படுவதால் அவர் கிரகண காலம் பற்றி கவலையற்றவர் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.

அதேநேரம், பூஜை நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோவிலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் வழிபாட்டின் நேரமும் மாற்றப்பட்டு இரவு 7 மணிக்கு நடைபெறும். போக் ஆரத்தி மாலை 6:30 மணிக்கு நடைபெறுவது வழக்கம். இன்று அந்த பூஜை இரவு 8 மணிக்கு நடைபெறும்.
கிரகணத்தின் போது பக்தர்கள் கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோயிலின் அர்ச்சகர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும்.

கிரகணம் முடிந்தவுடன் கோவில் சுத்தம் செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கருவறையும் கூட கழுவப்படுகிறது. சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணி முதல் மாலை 6.30 மணி வரை நிலவுவது குறிப்பிடத்தக்கது. 2 மணி நேரம் நீடிக்கும் கிரகணத்தின் போது, காலபைரேஸ்வரரை பூஜாரிகள் தியானிக்கிறார்கள். ஆனால் சிவலிங்கத்தை தொட மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில், கேதர்நாத், பத்ரிநாத் கோவில்கள் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் நடை அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications