இந்திய அரசியலை புரட்டி போடும் பாரத் ஜோடோ யாத்திரை? ராகுல் சாதித்தது என்ன! காங். எதிர்காலம் மாறுமா
சிலர் திட்டமிட்டு விதைக்கும் வெறுப்பையும், அச்சத்தையும் கடந்து மேலே வர முடியும் என்பதை ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை உணர்த்தியுள்ளது.
டெல்லி: 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் ராகுல் காந்தி நடத்திய நடைப்பயணம் இன்றுடன் நிறைவடைந்திருக்கிறது. மொத்தமாக 150 நாட்களில் 4,000 கிலோமீட்டரை நடந்தே நிறைவு செய்திருக்கிறார் ராகுல்.
சமீபகாலத்தில், இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய நடைப்பயணம் இதுதான். சரி.. யாத்திரைதான் முடிந்துவிட்டதே., ராகுல் காந்திக்கு இப்போது மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவிட்டதா? அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெற்று விடுமா என்பன போன்ற பல கேள்விகளை எதிர் தரப்பினர் விமர்சன ரீதியில் முன்வைப்பதைப் பார்க்க முடிகிறது.
இந்திய அரசியலை மேலோட்டமாக பார்க்கும் மக்கள் மனதிலும் இந்த கேள்விகள் எழலாம். தவறில்லை. ஆனால், சற்று ஆழமாகச் சென்று பார்த்தால் தான் இந்த நடைப்பயணத்தின் பின்னால் இருக்கும் அரசியலை நம்மால் உணர முடியும்.
பாரத் ஜடோ யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம்.. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு! ஹை அலர்ட்டில் காஷ்மீர்
எதை விதைத்திருக்கிறார் ராகுல்?
உண்மையில், ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை மனதில் வைத்தோ அல்லது பாஜகவின் பலத்துக்கு நிகராக காங்கிரஸும் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவோ அல்ல. ஒரு தீர்க்கமான செய்தியை (மெசேஜ்) மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே இந்த நடைப்பயணத்தின் பிரதான நோக்கமாக பார்க்கப்படுகிறது. என்ன செய்தியை அப்படி ராகுல் மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டார் என நீங்கள் கேட்கலாம். ஒன்று அல்ல., பல செய்திகள் அதில் அடங்கியிருக்கின்றன. ஒன்று, ஜாதி, மதங்களைத் தூக்கியெறிந்துவிட்டு அனைத்து தரப்பு மக்களையும் ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் சந்தித்தது. சமீபகாலமாக, ஜாதி, மதங்களை உயர்த்திப்பிடிக்கும் அரசியலையே பார்த்து வந்த மக்களுக்கு, அனைவரும் ஒன்றுதான் என்ற உணர்வை மீண்டும் விதைத்திருக்கிறது இந்த நடைப்பயணம்.
அரசியல் சாயம் இல்லை
இரண்டாவதாக, இந்த 'பாரத் ஜோடோ' யாத்திரையில் எந்த அரசியல் சாயமும் பூசப்படவில்லை. காங்கிரஸைத் தூக்கிப்பிடிக்கும் எந்த முழக்கமும் எழுப்பப்படவில்லை. காங்கிரஸின் கை சின்னம் எங்கும் இடம்பெறவில்லை. மாறாக, அன்பு, ஒற்றுமை, மனிதநேயம், சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் முழக்கங்களே இதில் இடம்பெற்றன. அதாவது, இது அரசியலுக்கான நடைப்பயணம் அல்ல.. முழுக்க முழுக்க அனைத்து தரப்பு மக்களுக்கான பயணம் என்பதும் இதில் ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கும் செய்தி.
"சங் பரிவாரை வெல்ல முடியும்"
மூன்றாவது, அதிகாரத்தைப் பயன்படுத்தி விதைக்கப்படும் வெறுப்பையும், அச்சத்தையும் கடந்து மேலே வர முடியும் என்பதை ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை உணர்த்தியுள்ளது. குறிப்பாக, தற்போது நாடு முழுவதும் மக்கள் மத்தியில் அவர்களுக்கு அறியாமலே ஒரு எண்ண ஓட்டம் திணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, வலதுசாரிகளை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்ற எண்ணம்தான் அது. அதை உடைத்து எறிந்திருக்கிறது ராகுல் காந்தியின் நடைப்பயணம்.
அரசியல் போருக்கான 'களம்'
ஆர்எஸ்எஸ், பாஜகவின் சித்தாந்தங்களும் எதிர்ப்புக்கு உள்ளாகும் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தி. அதுமட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ராகுல் நடைப்பயணம் வழங்கி இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு தீர்க்கமான அரசியல் போருக்கு ஏற்ற களத்தை இந்த நடைப்பயணம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. அதேபோல, அதிகாரமும் வலிமையும் இருந்தால் அவர்களிடம் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற பொதுவான எண்ணத்தை தகர்த்திருக்கிறது இந்த ராகுல் யாத்திரை.
"ரத்தம் சிந்தும் தலைவன்"
நான்காவது செய்திதான் மிக முக்கியமானது. இதுவரை ராகுல் காந்தி குறித்து பாஜக கட்டமைத்து வைத்திருந்த பிம்பம் மாறியுள்ளது. அரசியல் புரிதல் இல்லாதவர், ஒரு வளம் நிறைந்த கஷ்டம் தெரியாத குடும்பத்தின் வாரிசு, இந்தியா குறித்து சிறிதுதான் தெரிந்து வைத்திருப்பவர் என்கிற பிம்பங்கள் எல்லா மாறி, மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வீதியில் இறங்கி ரத்தமும் வியர்வையுமாகப் போராடும் ஒரு தலைவன் என்கிற பிம்பத்தை ராகுல் காந்திக்கு இந்த நடைப்பயணம் உருவாக்கித் தந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், எதிரிகளை வெற்றி பெற இந்த நடைப்பயணம் இல்லை. எதிரிகளிடம் போராடும் வலுவான ஆயுதங்களைத்தான் ராகுலுக்கு இது வழங்கி இருக்கிறது. இனி புதிய பிம்பத்துடன் களமாட வேண்டியது ராகுல்தான்.