ஓபன் இணையம் மிக முக்கியம்.. அதேபோல உள்ளூர் சட்டங்களையும் மதிக்கிறோம்.. சுந்தர் பிச்சை பளீச் பேச்சு
டெல்லி: ஐரோப்பாவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி, கூகுள் என்றும் உள்ளூர் சட்டங்களை மதித்து, அதற்கு இணங்கியே செயல்படும் என்று அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பயனாளர்களின் புகார்கள் குறித்து விரைவாகவும் உரிய முறையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் பரவலாக முன் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு சமூக வலைத்தளங்களுக்கான புதிய விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிட்டது. இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்பட சமூக வலைத்தளங்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
வெளிப்படத்தன்மை
இந்த கால அவகாசம் நேற்று முன்தினம் முடிந்தது. மத்திய அரசின் இந்தப் புதிய விதிகளை ஏற்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், இந்த விதிகள் தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள எங்கள் பிரிவு இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாங்கள் செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உள்ளூர் சட்டங்களை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம், எங்கள் வேலை எப்போதும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும்.
ஓபன் இணையத்தளம்
இலவச மற்றும் ஓபன் இணையம் தான் அனைத்திற்கும் அடித்தளம். அதன் நன்மைகள் குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். இதை உறுதி செய்யவே நாங்கள் உலகிலுள்ள பல அரசுகளுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனையில் ஈடுபடுகிறோம். அதேபோல எங்கள் நிறுவனம் அனைத்து நாட்டுச் சட்டங்களையும் முறையாக மதிக்கிறது. தேவையான நேரங்களில் அரசு கூறும் கருத்திற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்கிறோம்.
Array
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து. இப்போது இந்தியாவும் புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. இவை இந்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எப்படி நிர்வகிப்பது மற்றும் மாற்றியமைப்பது என்பதைக் கண்டறியும் முயற்சியாகவே நாங்கள் காண்கிறோம். எனவே, அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை எப்போதும் அளிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய விதிகள் என்ன
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் 4 முக்கிய விதிகளைக் கொண்டது. அதாவது சமூக வலைத்தள நிறுவனங்கள் புகார்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். அரசின் புகார்களை இந்த அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். அரசின் அறிவித்தல்களைக் கண்டிப்பாக இவர் அமல்படுத்த வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படுபவை குறித்து விசாரிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும். மத்திய அமைச்சர்களும் இடம்பெற்றுள்ள இந்தக் குழு தான் புகார்களில் நடவடிக்கை எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டதாக இருக்கும்.