அதிர்ச்சியாக உள்ளது.. நாட்டில் என்ன நடக்கிறது? உன்னாவ் வழக்கால் வெகுண்டெழுந்த தலைமை நீதிபதி!
உன்னாவ் பாலியல் வழக்கில் என்ன நடந்தது, நாடு எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கோபமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் என்ன நடந்தது, நாடு எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கோபமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கு மற்றும் தொடர் மர்ம மரணங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. 2018 ஏப்ரலில் உத்தர பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார்.
ஆனால் இதில் உபி அரசு முறையாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரித்தார்.
என்ன சொன்னார்
இந்த விசாரணையின் முடிவில், உன்னாவ் கொடூரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு, 45 நாட்களில் இதில் தீர்ப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் வன்புணர்வு மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடும் கோபம்
இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க தொடங்கிய போதில் இருந்தே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மிகவும் கோபமாகத்தான் அதை அணுகினார். உத்தர பிரதேச அரசு இந்த வழக்கை மிக மோசமாக விசாரித்து இருக்கிறது என்று கடுமையாக சாடினார்.
தலைமை
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது பேச்சில், உத்தர பிரதேச அரசு இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தவில்லை. அவர்கள் இதற்காக அந்த பெண்ணுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். வேண்டும் என்றே இந்த வழக்கில் அம்மாநில அரசு மெத்தனமாக செயல்பட்டு இருக்கிறது.
என்ன நடக்கிறது
இந்த நாட்டில் என்ன நடக்கிறது. இதை எல்லாம் பார்க்கவே மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. இதை கேட்கவே மிகவும் கவலையாக இருக்கிறது. இந்த வழக்கு இதுவரை கடந்து வந்த பாதையை பார்த்தால் கவலை அளிக்கிறது.
எப்ஐஆர் இல்லை
இதில் ஏன் இதுவரை முறையாக எப்ஐஆர் கூட பதியவில்லை. அதிலும் பதியப்பட்டு இருக்கும் எப்ஐஆர் எல்லாம் ஏன் குற்றம்சாட்டிய நபர்களுக்கு எதிராகவே இருக்கிறது. என்ன நடக்கிறது இந்த வழக்கில்.
கடிதம் இல்லை
எனக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த கடிதத்தை கூட நீதிமன்ற பொதுச் செயலாளர் அதிகாரி என்னிடம் கொடுக்கவில்லை. எனக்கு கடிதம் வந்தது என்பதையே நான் டிவி பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. நான் தவறு செய்தது போல சித்தரிக்கப்பட்டு இருக்கிறேன்.
நேரம்
இந்த விபத்து தொடர்பான தனி வழக்கை விசாரிக்க அரசு தரப்பு சொலிஸ்டர் ஜெனரல் ஏன் ஒரு மாதம் கேட்கிறார் என்று புரியவில்லை. இதை விசாரிக்க ஏன் ஒரு மாதம். அப்படி எல்லாம் நேரம் கொடுக்க முடியாது. 7 நாட்கள் மட்டும்தான் நேரம் கொடுக்க முடியும், என்று கடுமையாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசினார்.