வங்கக் கடலில் இன்று உருவாகிறது அசானி புயல்.. எங்கு கரையை கடக்கிறது?.. எங்கெல்லாம் பாதிப்பு
டெல்லி: வங்கக் கடலில் அசானி புயல் இன்று உருவாகிறது. இது எங்கு கரையை கடக்கும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து இன்று புயலாக மாறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது.

அசானி புயல்
இந்த நிலையில் அசானி புயல் அந்தமான் தீவுகளில் இருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்காளதேச கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா தெரிவித்துள்ளார். அந்தமான் தீவுகளில் புயல் கரையை கடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தமான் தீவுகள்
அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 200 கி.மீ. வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியிலும் அந்தமான் தீவுகளுக்கு 100 கி.மீ. தெற்கு மற்றும் தென்கிழக்கிலும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று புயலாக மாறும் நிலையில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
நடுக்கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு இந்திய கடற்படை சார்பில் விமானம், கப்பல்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுரை வழங்கப்பட்டது. இந்த புயல் வலுவடைந்து வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம், வடக்கு மியான்மர்- வங்கதேசம் இடையே கடலோர பகுதியில் மார்ச் 22 ஆம் தேதி கரையை கடக்கும். இந்தியாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

எங்கே கடக்கிறது?
அந்தமான் நிகோபர் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை வரை மூடப்பட்டுள்ளது. அந்தமான் நிர்வாகம் சார்பில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அசானி புயலால் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், மற்றும் புதுவையின் ஒரு சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல், மழையால் சிக்கியவர்கள் 03192- 245555 அல்லது 232714 என்ற உதவி எண்ணையோ 1-800-345-2714 என்ற டோல் ப்ரீ எண்ணையோ அணுகலாம்.












Click it and Unblock the Notifications