புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்.. முன்னாள் நிதித்துறை செயலாளர்.. யார் இந்த ராஜீவ் குமார்?
டெல்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வருகிற மே 14 ஆம் தேதி நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த ராஜீவ் குமாரை தலைமை தேர்தல் ஆணையராக மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமனம் செய்து இருக்கிறது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்
மே 15 ஆம் தேதி பதவியேற்பு
வருகிற மே 15 ஆம் தேதி இந்தியா ஜனநாயகத்தின் தலைமை பீடத்தை நிர்ணயிக்கும் அமைப்பான தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரியாக ராஜீவ் குமார் பதவியேற்க இருக்கிறார். புதிய தலைமை தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டு உள்ள ராஜீவ் குமார் யார் என்று இணையதளத்தில் பொதுமக்கள் சல்லடை போட்டு தேடத் தொடங்கி இருக்கிறார்கள். உங்கள் தேடலுக்கான விடையை ஒன் இந்தியா தமிழ் வழங்குகிறது.
யார் இந்த ராஜீவ் குமார்?
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் 1984 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் பிரிவில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை நிறைவு செய்தவர். உயிரியல் மற்றும் சட்டம் ஆகிய 2 இளங்கலை பட்டங்களை பெற்றுள்ளார். பொதுக் கொள்கை மற்றும் நிலையான தன்மை என்ற துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். சிக்கலான சூழல்களில் தீர்வுகளை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கக்கூடியவர் ராஜீவ் குமார் என அரசுத் துறையில் அவருக்கு நற்பெயர் உள்ளது.
நிதித்துறை செயலாளர்
பிரதமர் அலுவலகத்தின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக திகழ்ந்த ராஜீவ் குமார், கடந்த 2019 ஆம் ஆண்டு 2 வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் மத்திய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான நிதித்துறை செயலாளரே மத்திய பட்ஜெட்டை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் இணைப்பு
இவர் இரண்டரை ஆண்டுகள் நிதித்துறை செயலாளராக இருந்தபோதுதான் வங்கி ஊழியர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. குறிப்பாக பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கிகளின் இணைப்பில் ராஜீவ் குமாரின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல் நஷ்டத்தில் இயங்கிய ஐ.டி.பி.ஐ. வங்கியை விற்பனை செய்யும் திட்டத்தையும் அறிமுகம் செய்தவர் ராஜீவ் குமார்தான்.
எல்.ஐ.சி. தனியார்மயம்
குறிப்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதிலும் ராஜீவ் குமாருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு ராஜீவ் குமார் பதவிக் காலத்தின் இறுதியில் இருந்தபோதுதான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திய எல்.ஐ.சி.யை தனியார்மயமாக்கும் திட்டத்தை வடிவமைத்தவர் ராஜீவ் குமார்.
சர்ச்சைக்குரிய திட்டம்
முன்னதாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றிய ராஜீவ் குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான சர்ச்சைக்குரிய 360 டிகிரி கோண ஊதிய உயர்வு திட்டத்தை கொண்டு வந்தவர். இந்த நிலையில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் அலுவலகத்தின் நம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ். அதிகாரியாக திகழ்ந்த ராஜீவ் குமார் தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.