"சாத்தானிக் வெர்சஸ்" சர்ச்சை! கொலை செய்தால் 3 மில்லியன் டாலர் வெகுமதி.. யார் இந்த சல்மான் ருஷ்டி
டெல்லி: அமெரிக்காவில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டி, பல ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தவர்.
Recommended Video
மகாராஷ்டிராவில் பிறந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்று இருந்தார்.
அந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மேடையிலேயே மர்ம நபர் ஒருவர், சல்மான் ருஷ்டி மீது பாய்ந்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.
பதுங்கி வாழ்ந்தார்; பயந்து வாழவில்லை - கலகங்களை காதலித்த சல்மான் ருஷ்டியின் கதை
தாக்குதல்
முதலில் அங்கு என்ன நடக்கிறது என்பதே அருகில் இருந்தவர்களுக்கு புரியவில்லை. பின்னர் நிலைமையை உணர்ந்து, தாக்குதல் நடத்தியவரை அருகில் இருந்தோர் பிடித்தனர். ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வரும் சல்மான் ருஷ்டி, ஒரு கண்ணை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
யார் இவர்
பல ஆண்டுகளாகவே எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த சல்மான் ருஷ்டி மீது இப்போது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. யார் இந்த சல்மான் ருஷ்டி? ஏன் இவர் தலைமறைவாக இருந்தார் என்பது குறித்துப் பார்க்கலாம். 75 வயதான சல்மான் ருஷ்டி, எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகம் கடும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு இருந்தது. 1980களில் இவருக்கு ஈராக் நாட்டில் இருந்து கொலை மிரட்டல்களும் கூட வந்தது.
புக்கர் விருது
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. 1981ஆம் ஆண்டு வெளியான இவரது 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' நாவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதற்காக அவர் புக்கர் விருதும் கூட பெற்று இருந்தார். புக்கர் பரிசை வென்ற சிறந்த நாவலாக இது இரண்டு முறை விருது பெற்றது. இருப்பினும், இவரது தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகம் தான் உலகெங்கும் இவரைத் தெரியப்படுத்தியது.
தி சாத்தானிக் வெர்சஸ்
1988இல் இந்தப் புத்தகம் வெளியான உடனேயே பல இஸ்லாமிய நாடுகளில் புத்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தில் முகமது நபியை இழிவாகச் சித்தரித்து கருத்துகள் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி 1989ஆம் ஆண்டு ருஷ்டியை கொல்ல வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார். மேலும், ருஷ்டியைக் கொல்பவருக்கு $3 மில்லியன் வழங்கப்படும் என்றும் அறிவித்து சர்ச்சை கிளப்பி இருந்தார்.
சர்ச்சை
இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சை ஆனது. இதற்கு தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றே ஈரான் அரசு கூறியது. இருந்த போதிலும், ருஷ்டிக்கு எதிரான உணர்வு ஈரானில் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. ஈரானில் உள்ள 15 கோர்தாட் அறக்கட்டளை என்ற ஒரு மத அமைப்பு ருஷ்டியை கொல்பவருக்கான தொகை $2.8 மில்லியனில் இருந்து $3.3 மில்லியனாக உயர்த்துவதாகவும் அறிவித்தது.
புத்தகங்கள்
இப்படி தொடர்ச்சியாக அவருக்குக் கொலை மிரட்டல் வந்ததால் அவர் பிரிட்டனில் செட்டில் ஆனார். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்ற போதிலும், அவர் தொடர்ச்சியாகப் பல புத்தகங்களை எழுதியே வந்தார். அது நல்ல வரவேற்பும் பெற்றது.
தாக்குதல்
இருப்பினும், இதையெல்லாம் ருஷ்டி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வெகுமதி பெற ஆர்வம் காட்டி தன்னை யாரும் கொல்வார்கள் என்று நினைக்கவில்லை என்றே ருஷ்டி பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறி இருந்தார். மேலும், தனது புத்தகத்தில் நபிகள் நாயகத்திற்கு எதிரான கருத்துகள் இல்லை என்றும் ஈரானில் இருப்பவர்கள் தனது புத்தகத்தைப் படித்து இருப்பார்கள் என்பது சந்தேகமே என்று கூறி இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.