அங்கே போட்ட அச்சாரம்.. எடப்பாடி ‘கிரீன் சிக்னல்’.. உடனே ஓகே சொன்ன பாஜக! பின்னணி இதானா? அப்போ ஓபிஎஸ்?
டெல்லி : எடப்பாடி பழனிசாமிக்கு, டெல்லி பாஜக தலைமை முக்கியத்துவம் கொடுத்திருப்பதற்குப் பின்னணியில், ஈபிஎஸ் கொடுத்திருக்கும் 'கிரீன் சிக்னல்' தான் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அமித்ஷா இங்கு வரும்போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பேசியது பாஜகவிற்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று பார்த்தால், பாஜக ஈபிஎஸ்ஸை ஆதரிக்கிறதே என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஆனால், அமித்ஷாவுக்கே ஈபிஎஸ் போன் செய்து பேசியதாகவும், அதன்பிறகு பாஜக தலைவர்கள் ஈபிஎஸ் தரப்போடு சில பேச்சுகளை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் சீட் தொடர்பாக பாஜகவின் விருப்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி பச்சைக் கொடி காட்டியதே, பாஜக இறங்கி வந்திருப்பதற்குக் காரணம் என்கிறார்கள்.

ஈபிஎஸ்ஸுக்கு அங்கீகாரம்?
எடப்பாடி பழனிசாமிக்கு ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 'அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்' எனக் குறிப்பிட்டு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று டெல்லி சென்று ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், டெல்லி பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது, நீதிமன்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி
ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட சுமார் 40 கட்சிகளின் தலைவர்களை மத்திய அரசு அழைத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்புக் கடிதத்தில் 'அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி' எனக் குறிப்பிட்டுள்ளதுதான் ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஒவ்வொரு நகர்வும்
பாஜகவின் ஆதரவைப் பெறுவதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பெரும் போட்டியே நடந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்து கை குலுக்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரைச் சந்திக்கவில்லை. அமித்ஷாவை சந்திக்காதது பற்றிய கேள்விக்கு, அமித்ஷா எப்போது வந்தாலும் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனத் தெரிவித்தார் ஈபிஎஸ்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி, பாஜகவை எதிர்க்கத் தயாராகி விட்டதா என கேள்விகள் எழுந்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அமித்ஷா பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்காதது பற்றி விளக்கம் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, அன்றே ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த மூத்த எம்.பி ஒருவர் பாஜகவின் முக்கிய அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். மேலும், பாஜகவை விமர்சித்து கூட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேச வேண்டாம் என்றும் ஈபிஎஸ் தனது அணியின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக கூரப்பட்டது.

அச்சாரம் - முக்கிய புள்ளிகளிடம் ஆலோசனை
இந்நிலையில், கடந்த டிசம்பர் 2ஆம் தேதி கோவையில் நடந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனுக்கு ஈபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து கூட்டணி கட்சி என்ற முறையில், வானதி சீனிவாசன் இந்த போராட்டத்தில் பங்கேற்றார். வானதி சீனிவாசன் இதுகுறித்து டெல்லியில் முக்கிய தலைவர்களிடம் ஆலோசித்து விட்டே அதிமுகவின் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னணியில்
இந்நிலையில் தான் ஜி20 மாநாடு பற்றிய ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக 2 எம்.பிக்கள் இருக்கும் நிலையில், அவருக்கு அழைப்பு விடுக்கப்படாமல் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது ஓபிஎஸ் தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் இந்த நகர்வுக்குப் பின்னணியில் சில பேச்சுவார்த்தைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இறங்கி வந்த ஈபிஎஸ்?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது. இந்நிலையில், வரும் தேர்தலில் இரட்டை இலக்கங்களில் சீட் எதிர்பார்க்கிறது பாஜக. ஓபிஎஸ்ஸை சேர்க்கும் பாஜகவின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், பாஜகவுக்கு அதிக சீட்களை தரும் முடிவுக்கு ஈபிஎஸ் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி தங்களுக்கு அவசியம் என உணர்ந்துள்ள பாஜகவும், எடப்பாடி பழனிசாமியிடம் முடிந்தவரை சீட்களை அதிகமாகப் பெற ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

கிரீன் சிக்னல்
மாஜிக்கள் மீதான வழக்குகள் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வந்த பாஜக, தற்போது அவருக்கு ஆதரவளிப்பதற்கு பின்னணியில் சீட் கணக்குகளுக்கு எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல் காட்டி இருப்பதே காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமியை சரிக்கட்டி தாங்கள் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச சீட் எண்ணிக்கையை உறுதி செய்யப்போகிறது, அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்திற்கிணங்க, பாஜக தலைமை ஓபிஎஸ்ஸையும் தாஜா செய்துவிடும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications