அது என்ன 9 வகை தானியங்கள்? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசின் முக்கியத்துவம் இதுதான்
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோருக்கு வித்தியாசமான முறையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் பாரம்பரியமான 9 வகை தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை நினைவு பரிசாக வழங்கினார். இதற்கு பின்னணியில் அசர வைக்கும் காரணம் உள்ளது.
Recommended Video
உலக பிரசித்தி பெற்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடந்து முடிந்தது. கடந்த மாதம் 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடந்த போட்டியை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இந்த போட்டியை தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடத்தி முடித்தது. இதையடுத்து முதல் அமைச்சர் ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இதற்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், பல்வேறு உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார்.
தமிழ்நாட்டின் தானியங்கள்! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த ஸ்பெஷல் பரிசுப் பெட்டகம்!
பிரதமர், ஜனாதிபதியுடன் ஸ்டாலின் சந்திப்பு
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க டெல்லிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு புறப்பட்டு சென்றார். இன்று காலை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆகியோரை தனித்தனியே சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு இன்று மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். மேலும் நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நினைவு பரிசாக தானிய பெட்டகம்
இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய 3 பேருக்கும் முதல்வர் ஸ்டாலின் தானிய பெட்டகங்களை நினைவுப்பரிசாக வழங்கினார். இதனை அவர்கள் சிரித்த முகத்துடன் வாங்கி கொண்டனர். இருப்பினும் வழக்கத்துக்கு மாறாக முதல்வர் ஸ்டாலின் தானிய பெட்டகங்கள் வழங்கியது ஏன்? அதில் உள்ள பொருட்கள் என்னென்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் வழங்கிய நினைவு பெட்டகத்தில் தமிழகத்தின் பாரம்பரிய 9 தானியங்கள் உள்ளன. மாப்பிளை சம்பா, கருப்புக்கவுனி, குள்ளக்கார், சீரக சம்பா, கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, வரகு உள்ளிட்ட 9 வகையான தானியங்களை நினைவு பரிசாக அளித்தார்.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
இதில் மாப்பிள்ளை சம்பா என்பது சிகப்பு நிறத்தால் ஆண்ட்டி ஆக்சிடண்ட் தன்மையுடன் நோயில் இருந்து காக்கும் அரிசியாகும். குள்ளக்கார் என்பது பாலூட்டும் பெண்களுக்கும், கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரும் அரிசியாகும். கருப்புக்கவுனி என்பது நெடுங்காலமாக அரசர்களுக்கு மட்டுமே பயிரிடப்பட்ட ஆந்தோசயனைன் நிறைந்த புற்றை தடுக்கும் கருப்பு அரிசியாகும். சீரகசம்பா என்பது பாலாற்றங்கரையில் பயிராகும் தனித்துவ மணம் கொண்ட சுவைமிக்க அரிசியாகும். குடவாழை என்பது தோலுக்கு பொலிவு அளிக்கம் மரபு சிகப்பு அரிசியாகும்.
அருந்தானியங்களின் அரசன்
கம்பு என்பது அருந்தானியங்களின் அரசனாகும். அரிசியைவிட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கொண்ட சர்க்கரை நோயாளிக்கான லோ கிளைசிமிக் அரிசியாகும். வரகு என்பது தமிழ் மூதாட்டி அவ்வை விரும்பி கேட்டு உண்ட மெல்ல சர்க்கரை தரும் மரபு தானியமாகும். சாமை என்பது பழங்குடி மக்கள் பயிராக்கி படைத்திடும் மருத்துவ குணமிக்க சிறுதானியம், தினை என்பது கண்ணுக்கும், குழந்தைக்கும் நலம் தரும் பொன்னிற தானியமாகும். கேழ்வரகு என்பது இரும்பும் கால்சியமும் நிறைந்த தாய்ப்பாலுக்கு அடுத்தததாக தரப்பட வேண்டிய முதல் திட உணவு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?
ஓடி ஓயாது உழைக்கும் விளிம்பு நிலை மனிதனின் வயிற்று பசியையும், மரத்தின் விளிம்பில் நின்று கொண்டு காடு வளர்க்கும் பணி செய்யும் பறவையின் பசியையும் ஆற்றிய நிலம் தமிழகமாகும். 100க்கும் மேற்பட்ட அரிசி வகைகளலாலும், பலவகை சிறுதானியங்கள் விளையும் தமிழகம் என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் தான் முதல்வர் ஸ்டாலின் 9 தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை நினைவு பரிசாக 3 பேருக்கும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.