சுழன்றடிக்கும் சர்வதேச அரசியல்.! சீக்கிரம் உயரப்போகுது பெட்ரோல், டீசல்! இடியாப்ப சிக்கலில் இந்தியா
டெல்லி: பல்வேறு காரணங்களால் இந்தியாவில் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும். இந்தாண்டு ஏப்ரல் மாதம் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.
இருப்பினும், அதன் பிறகு இந்தியாவில் கடந்த 140 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. இந்த நிலை விரைவில் மாறலாம் என்று கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்..விலை எப்போது குறையும்?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கச்சா எண்ணெய்
கொரோனா காரணமாக 2020இல் பெட்ரோல், டீசல் தேவை பாதாளத்திற்குச் சென்றது. கொரோனா குறையத் தொடங்கியதும் பெட்ரோல், டீசல் தேவையும் மெல்ல அதிகரித்தது. இதனால் விலையும் கணிசமாகவே உயர்ந்தது. இதற்கிடையே உக்ரைன் போரும் வந்துவிட, பிப்ரவரி மாதம் கச்சா எண்ணெய் விலை மளமளவென உயரத் தொடங்கியது. இதனால் ஏப்ரல் மாதம் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.
மத்திய அரசு
இதையடுத்து கடந்த மே மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. அதன் பின்னர், கடந்த சில மாதங்களாகவே எவ்வித மாற்றமும் இல்லாமலேயே பெட்ரோல், டீசல் விலை இருந்து வருகிறது. இருப்பினும், இந்த நிலை விரைவில் மாறலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது விரைவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்,
ஒபெக் நாடுகள்
இதற்குக் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளான ஒபெக் எடுத்துள்ள முடிவு முக்கியமானது. அதாவது கொரோனா கலத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்ய தினசரி இருபது லட்சம் பேரல்களை உற்பத்தியைக் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்து உள்ளனர். சில வாரங்களில் இந்த முடிவு நடைமுறைக்கு வர உள்ளது. உலகில் எரிபொருளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக உள்ள இந்தியாவுக்கு இது பெரிய பாதிப்பையே தரும்.
வல்லுநர்கள் கருத்து
இது தொடர்பாக ஐசிஆர்ஏ ரேட்டிங் இணைத் தலைவர் பிரசாந்த் வசிஷ்ட் கூறுகையில், "சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை நாட்டில் உயரவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை, சர்வதேச சந்தை விலையைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் இழப்பைச் சந்தித்தன" என்றார்.
ஏன் குறைக்கவில்லை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 115 டாலரை தாண்டியது. அந்தச் சமயத்திலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைந்தனர். அதன் பின்னர் அது மெல்லக் குறைந்து 80-85 டாலருக்கு குறைந்தது. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்கள் முன்பு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என்பதால் அந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
பெரிய பாதிப்பு
இப்போது ஒபெக் நாடுகள் உற்பத்தியைக் குறைக்க உள்ள நிலையில், அது இந்தியாவுக்குப் பெரிய பின்னடைவாகவே இருக்கும். சர்வதேச சந்தையில் $1 அதிகரித்தால் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும், தினசரி இருபது லட்சம் பேரல்கள் உற்பத்தி குறைந்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரைத் தாண்டவும் கூட வாய்ப்புகள் உள்ளன.
ரூபாய் மதிப்பு
அதேபோல இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.40ஆக உள்ளது. இது கடந்த மே மாதம் 77ஆக இருந்தது. அதாவது கச்சா எண்ணெய் விலை உயரவே இல்லை என்றால் கூட நாம் இப்போது ஒரு டாலருக்கு சுமார் 5 ரூபாய் அதிகம் செலவழிக்க வேண்டும். வரும் நாட்களில் ரூபாய் மதிப்பு மேலும் சரியலாம் என்று கூறப்படுகிறது.
உயரும்
இத்துடன் சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை உயர்வதால், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள். பெரும்பாலான வளர்ந்த நாடுகளிலும் பெட்ரோல் விலை ஓராண்டில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ள போதிலும் இந்தியாவில் அரசு நடவடிக்கையால் பெட்ரோல் விலை 2% குறைந்துள்ளதாக அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்து இருந்தார். ஆனால், அந்த நிலை விரைவிலேயே மாற வாய்ப்புகள் அதிகம். இதனால் விலைவாசியும் மேலும் உயரும் அபாயம் உள்ளது.