புதிய "எஸ்எஸ்எல்வி" ராக்கெட்! 72 மணி நேரத்தில் அசெம்பிள்! இனி வாரம் ஒரு முறை ராக்கெட் அனுப்பலாம்
டெல்லி: இஸ்ரோ நிறுவனம் இன்று விண்ணுக்குச் செலுத்திய எஸ்எஸ்எல்வி ராக்கெட், இந்தியாவின் விண்வெளியை துறையையே புரட்டிப்போட்டுவிடும்.
Recommended Video
இஸ்ரோ நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு சாட்டிலைட்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. குறைந்த செலவில், மிகவும் பாதுகாப்பாக விண்வெளிக்கு சாட்டிலைட்கள் அனுப்பப்படுவதால் உலக நாடுகளின் முதல் சாய்ஸாக இஸ்ரோ உள்ளது.
இதனிடையே இன்று காலை குறைந்த எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீ ஹரிகோட்டா சதீன் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இருப்பினும், சாட்டிலைட்களில் இருந்து இன்னும் சிக்னல் வராததால் சற்று சஸ்பென்ஸ் நிலவுகிறது.
புதிய சரித்திரம் படைத்த இஸ்ரோ.. முதல்முறையாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி ராக்கெட்!
புதிய ராக்கெட்
இதற்கான கவுன் டவுன் இன்று அதிகாலை 3.18 மணிக்குத் தொடங்கப்பட்டது. குறைந்த எடை கொண்ட இஓஎஸ் 02 மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ஆஸாதிசாட் ஆகிய இரு சாட்டிலைட்கள் இதில் இடம் பெற்று உள்ளது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் சாட்டிலைட்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவது இது முதல்முறையாகும். ஏற்கனவே, எஸ்எஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை இஸ்ரோ வெற்றிகரமாக உருவாக்கி உள்ள நிலையில், இப்போது எஸ்எஸ்எல்வி ராக்கெட்டும் வெற்றிகரமாக உருவெடுத்து உள்ளது.
குறைந்த எடை
இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் மிகவும் முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. எடை குறைந்த சாட்டிலைட்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் இந்த ராக்கெட்டை வெறும் 5 அல்லது 6 பேர் 72 மணி நேரத்திற்குள் அசெம்பிள் செய்துவிடலாம். இதற்கு இப்போது இருக்கும் ராக்கெட்களை காட்டிலும் பத்தில் ஒரு பங்கு தான் செலவாகும். இப்போது கிட்டதட்ட 90% எடை குறைந்த சாட்டிலைட்களே விண்ணில் ஏவப்படும் நிலையில், அதை மனதில் வைத்துக் கொண்டே இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டு உள்ளது.
அதிகம் பயன்படுத்தப்படும்
இந்த எஸ்எஸ்எல்வி கடந்த 2018ஆம் ஆண்டிலேயே தனது முதல் பயணத்தை மேற்கொண்டு இருக்க வேண்டும். இருப்பினும், தொழில்நுட்ப சிக்கல், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் அது தள்ளிக் கொண்டே போனது. முதல் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ள நிலையில், வரும் காலத்தில் அதிகம் பயன்படுத்தும் ராக்கெட்டாக இந்த எஸ்எஸ்எல்வி மாறும். முன்னதாக நமது பிஎஸ்எல்வி ராக்கெட்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பயணங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறிய சாட்டிலைட்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே சிறிய சாட்டிலைட்கள் பயன்பாடு அதிகரித்தது. இருப்பினும், அவற்றைத் தனியாக விண்வெளிக்கு அனுப்பினால், செலவு அதிகம் என்பதால் பெரிய சாட்டிலைட்கள் அனுப்பப்படும்போது மட்டுமே அத்துடன் சேர்த்து சிறிய ராக்கெட்களும் அனுப்பப்படும். இதனால் சில சமயங்கள் முற்றிலும் தயாராக இருக்கும் சாட்டிலைட்கள் கூட பல மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.
ஸ்பேஸ்எக்ஸ்
கடந்த 10 ஆண்டுகளில் டேட்டா வளர்ச்சி அபரிவிதமாக அதிகரித்து உள்ள நிலையில், சிறிய சாட்டிலைட்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. இதனால் மாதக் கணக்கில் அவர்களால் காத்திருக்க முடியாது. எனவே, வேறு வழியின்றி, அதிக செலவழித்து அவர்கள் சாட்டிலைட்களை அனுப்புகின்றனர். அல்லது ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 100+ சிறிய சாட்டிலைட்களை அனுப்புகின்றன. இதன் விளைவாகவே இப்போது எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.
ஏன் முக்கியம்
ஏனென்றால் இஸ்ரோ செலுத்தும் பெரும்பாலான சாட்டிலைட்கள் வணிக ரீதியாக உருவாக்கப்பட்ட சிறிய சாட்டிலைட்கள் தான். எனவே, செலவைக் குறைப்பதில் இந்த சாட்டிலைட்கள் முக்கியமானதாக இருக்கும். அமெரிக்காவைப் போலவே இந்தியாவிலும் விண்வெளி துறையில் தனியார் முதலீடு வேகமாக அதிகரித்துள்ளது. குறைந்தது 3 தனியார் நிறுவனங்கள் சிறிய வகை சாட்டிலைட்களை விண்ணுக்குச் செலுத்தும் ராக்கெட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. இந்தச் சூழலில் அவர்களுக்குப் போட்டி அளிக்கும் வகையில் இஸ்ரோ இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை உருவாக்கி உள்ளது.
வெறும் 72 மணி நேரம்
இஸ்ரோவின் முந்தைய ராக்கெட்களான பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் அசெம்பிள் செய்யவே 80 நாட்கள் வரை ஆகும். எனவே, ஓராண்டிற்கு 5-6 முறை தான் இஸ்ரோவால் ராக்கெட்டை அனுப்ப முடிந்தது. அதேபோல செலவும் அதிகம். இதனால் இஸ்ரோவுக்கு கிடைக்கும் லாபமும் குறைந்தது. ஆனால், எஸ்எஸ்எல்வி இதை அப்படியே மாற்றப் போகிறது. 5 அல்லது 6 பேர் சேர்ந்து இந்த ராக்கெட்டை வெறும் 72 மணி நேரத்திற்குள் அசெம்பிள் செய்துவிடலாம்.
50 முறை
இந்த ராக்கெட்டால் 500 கிலோ வரை எடை கொண்ட சாட்டிலைட்களை பூமியில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவு வரை எடுத்துச் செல்ல முடியும். பெரும்பாலான சாட்டிலைட்கள் அங்கு தான் நிலைநிறுத்தப்படும். இது இஸ்ரோவின் முக்கிய மைக்கல்காக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இனி வாரத்திற்கு ஒரு முறை கூட இஸ்ரோவால் சாட்டிலைட்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.