பல கேள்விகளுக்கு பதிலளித்த மமதாவின் ஒற்றை வார்த்தை..சோனியா உடன் சந்திப்பில் நடந்தது என்ன..பரபர தகவல்
டெல்லி: வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சி ஒரே அணியில் இணைக்கும் முயற்சிகளைக் கையில் எடுத்துள்ள மம்தா பானர்ஜி, கூட்டணி தலைமை குறித்து நேற்று பேசியது பல கேள்விகளுக்கு விடையை அளித்துள்ளது.
நாட்டில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு கொரோனா பரவல் இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், நொடியும் தாமதிக்காமல் அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய்
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை எதிர்த்து அதிமுகவின் போராட்டம் என்றால் தேசியளவில் பாஜகவுக்கு எதிரான மாபெரும் கூட்டணியை அமைக்கும் முயற்சிகள் விறுவிறுவென தொடங்கியுள்ளது.
மம்தா பானர்ஜி
இந்த முறை தேசியளவில் பாஜகவுக்கு எதிராகக் கூட்டணியைக் கட்டமைக்கும் முயற்சிகளை எடுத்து இருப்பவர் மம்தா பானர்ஜி. நான்கு நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர்களை வரிசையாகச் சந்தித்து வருகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோரை செவ்வாய்க்கிழமை மம்தா சந்தித்துப் பேசினார்.
சோனியா காந்தி - மம்தா சந்திப்பு
அதைத் தொடர்ந்து நேற்று மாலை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லதில் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடன் இருந்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனையில், கொரோனா தொடங்கி பெகாசஸ், மக்களவை தேர்தல், தேசியளவிலான கூட்டணி வரை பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
ஓரணியில் திரள்வோம்
இந்த மீட்டிங்கிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றெல்லாம் கூறவில்லை. எவை குறித்து ஆலோசிக்கப்பட்டது என பளிச்சென சொன்னார். நாட்டில் இருக்கும் கொரோனா நிலை, பெகாசஸ் விவகாரம் பற்றியும் தேசியளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும் பேசியதாகத் தெரிவித்தார். மேலும், பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தலைமை முக்கியமில்லை
பாஜகவுக்கு எதிராகக் கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்பீர்களா எனச் செய்தியாளர் கேட்டதற்கு, "நான் ஒரு அரசியல் ஜோதிடர் இல்லை. காலம் தேவையும் தான் நிலைமை முடிவு செய்யும். வேறு யாராவது கூட்டணியை முன்னிறுத்தினாலும் எனக்குச் சிக்கல் இல்லை. இது குறித்துப் பேசி முடிவு செய்வோம். தேர்தல். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது என்பது தொடர்ச்சியான ஒரு பணி. மக்களவை தேர்தலில் மோடி vs நாடு என்று தான் இருக்கும்" என்றார்.
2019 தேர்தல்
மம்தாவின் இந்த கருத்து அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்த ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. உத்தரப் பிரதேசம் தொடங்கி ஆந்திர வரை பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் நிற்கவில்லை. இதனால் எதிர்ப்பு வாக்குகள் சிதற, அது பாஜகவுக்கே உதவியது.
மேற்கு வங்கம்
குறிப்பாக 42 மக்களவை எம்பிகளை கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் திரிணாமுல், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என நான்கு முனை போட்டி நிலவியது. இது பாஜகவுக்கு உதவியது. எதிர்ப்பு வாக்குகள் சிதறியதால், 34 இடங்களில் வென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸால் 22 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதேநேரம் 2014இல் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றிருந்த பாஜக 18 இடங்களை கைபற்றி ஷாக் கொடுத்தது.
மம்தா கனவு
தனித்துக் களமிறங்குவதன் மூலம் தொங்கு நாடாளுமன்றம் அமைத்தால், சரியான காய்களை நகர்த்தி முதல்வராகலாம் என்ற திட்டம் போட்டு மம்தா செயல்பட்டார். அப்படி பிரதமர் கனவுடன் இருந்த மம்தா தான், தலைவர் பதவி தேவையில்லை என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். மம்தாவின் இந்த மாற்றத்திற்குக் காரணம் சில மாதங்களுக்கு முன் மே வங்க சட்டசபைத் தேர்தலும், அதில் பாஜக காட்டிய அணுகுமுறையுமே காரணம்.
சட்டசபை தேர்தல்
மேற்கு வங்கத்தில் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்தது. 42 எம்பிகளை கொண்ட மாநிலம் என்பதால், 2024 மக்களவை தேர்தலில் மே வங்கத்தில் ஆளும்கட்சியாக இருந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டது பாஜக. வங்கத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி தொடங்கி அமித் ஷா, ராஜ்நாத் சிங் என வரிசையாக எல்லா பாஜக தலைவர்களும் வங்கத்தில் முகாமிட்டிருந்தனர்.
பாஜக வியூகம்
அப்போது திரிணாமுல் காங்கிரஸையும் மம்தாவையும் தனிமைப்படுத்த பாஜக பல வழிகளில் நெருக்கடி கொடுத்து. திரிணாமுல் காங்கிரஸிலிருந்த பல முக்கிய தலைவர்களும் தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவில் ஐக்கியமாகினர். மம்தாவுக்குத் தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் கூட பாஜகவின் விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. மம்தாவை பலவீனமாக ஒரு தலைவராகக் காட்ட முயன்றன.
கூட்டணி
அதையும் தாண்டி மம்தா மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் வெற்றி கண்டார். பாஜகவால் வெறும் 77 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்தத் தேர்தல் சமயத்தில் தான் பாஜகவின் சக்தியை மம்தா முழுமையாக புரிந்துகொண்டார். அதனால் தான் தேர்தலுக்கு முன்னரே தேசியளவில் எதிர்க்கட்சியைக் கட்டமைப்பது பற்றி காங்கிரஸ், திமுக உட்பட 15 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா கடிதம் எழுதியிருந்தார். பாஜக மத்தியில் ஆட்சியிலிருந்தால் மாநிலக் கட்சிகளே இல்லா சூழல் உருவாகும் என அஞ்சிய மம்தா, தேர்தலுக்குப் பிறகு தேசியளவில் பாஜகவுக்கு எதிராகக் கூட்டணிக்கு முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி தேர்தல் முடிந்ததும் தற்போது எவ்வித அலட்டலும் இல்லாமல் கூட்டணி அமைக்கும் பணிகளை மம்தா தொடங்கிவிட்டார்.
திட்டவட்டம்
கடந்த மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரளாததே பாஜகவின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்பதைத் தெளிவாக புரிந்து வைத்துள்ள மம்தா, அதனால் கூட்டணி அமைக்கையில் சிறு தவறும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அத்தானால் பாஜகவை வீழ்த்துவதே ஒரே இலக்கு கூட்டணிக்கு யார் தலைமை ஏற்றாலும் பிரச்சினை இல்லை என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் மம்தா..!