விவசாய நிலங்களை மணலாக மாறவிடக்கூடாது... வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக: ராகுல் காந்தி
இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களை மணலாக மாறவிடக்கூடாது, தங்களின் நண்பர்களுக்காக இந்த வயல்களை வழங்க அனுமதிக்கக் கூடாது என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களை மணலாக மாறவிடக்கூடாது, தங்களின் நண்பர்களுக்காக இந்த வயல்களை வழங்க அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். டெல்லியை நோக்கி 'டெல்லி சலோ' என்ற போராட்டத்தை முன்னெடுத்து டிராக்டர்களில் பயணப்பட்டனர். விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. தடையை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல் டெல்லியின் புறநகரில் உள்ள எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் மழை, குளிர், வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சத்தியத்திற்கான போரில் போராடும் விவசாயிகளை உலகில் எந்த அரசாங்கமும் தடுக்க முடியாது. விவசாயிகளின் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும், கறுப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியிருந்தார்.
எட்டு மாத காலமாக பல கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். டிராக்டர் பேரணி நடத்தி டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர் விவசாயிகள். இதுவரை 12 சுற்றுப் பேச்சு மத்தியஅரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அவ்வப்போது ஜந்தர்மந்தர் பகுதியிலும் விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக விவசாயிகளும் டெல்லி சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக கேரளா, பஞ்சாப், ஹரியானாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிராக்டர் பேரணியும் நடத்தினார். கடந்த பிப்ரவரி மாதம் வயநாட்டில் பேசிய ராகுல் காந்தி, இந்திய விவசாயிகள் படும் துயரங்களை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வருகிறது. ஆனால், டெல்லியில் உள்ள மத்திய அரசால் விவசாயிகளின் வேதனையை புரிந்துகொள்ள முடியவில்லை என்று குற்றஞ்சாட்டினார். விவசாயிகள் குறித்து யாரேனும் குரல் கொடுத்தாலும் அதை மத்திய அரசு விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த புதிய வேளாண் சட்டங்கள் வேளாண் முறையை அழிக்கும் சட்டங்களாகும், இந்திய விவசாயத்தின் மூலம் உருவான ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் சில நண்பர்களுக்காக நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என விமர்சித்திருந்தார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை எதிர்கட்சியினர் முடக்கினர். நாடாளுமன்ற வளாகத்திலும் சைக்கிள் பேரணி, டிராக்டர் பேரணி நடத்தினார் ராகுல்காந்தி.
விவசாயிகளின் குரல்வளையும் எதிர்கட்சியினர் குரல்வளையும் நசுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
விவசாயிகளின் போராட்டம் எட்டு மாத காலமாக நீடித்து வருவதால் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி. இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களை மணலாக மாறவிடக்கூடாது, தங்களின் நண்பர்களுக்காக இந்த வயல்களை வழங்க அனுமதிக்கக் கூடாது என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி. மேலும், #FarmersProtest எனும் ஹேஸ்டேகையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை சொந்த ஊர் திரும்ப செல்லப்போவதில்லை என்று உறுதியாக கூறியுள்ளனர் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications