ஆசையில்லா சாமியாராம்.. ஆடையில்லா பெண்கள் அழகாம்! வாயை விட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட பாபா ராம்தேவ்!
டெல்லி : பிரபல சாமியாரும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனருமான பாபா ராம்தேவ் 'ஆடையில்லா பெண்கள் அழகு' என்று கூறியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் டெல்லியை தொடர்ந்து மகராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்ச்சைக்கு பெயர் போன பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
அரியானா மாநிலம் மகேந்திர நகர் மாவட்டத்தில் அளிப்பூர் எனும் கிராமத்தில் பிறந்த ராமகிருஷ்ண யாதவ், அதன் பின்னர் தனது பெயரை பாபா ராம்தேவ் என்று மாற்றிக் கொண்டு சாமியாராக மாறினார்.
காவி உடை அணிந்து துறவறம் மேற்கொண்ட அவர் பதஞ்சலி யோகா மூலம் இலவச யோகா பயிற்சி அளித்து வந்தார். தொடர்ந்து திவ்யா யோக் மந்திர் ட்ரஸ்ட் என்ற அமைப்பை தொடங்கிய அவர் யோகா பயிற்சி அளித்து வந்தார்.

பாபா ராம்தேவ்
அதற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் அமிதாப்பச்சன், ஷில்பா செட்டி உள்ளிட்ட பிரபலங்களும் அவரிடம் யோகா கற்றுக் கொண்டனர் இதை அடுத்து உலகம் முழுவதும் தனது கிளையை விரிவுபடுத்திய அவர் ஸ்காட்லாண்டில் கூட ஒரு தீவை தானமாக பெற்று பயிற்சி வழங்கி வருகிறார். தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தை தொடங்கியவர் சோப்பு சீப்பு ஷாம்பு என விற்பனை செய்து தற்போது அதனை மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் போல நடத்தி வருகிறார்.

அரசியல் ஆர்வம்
அரசியலில் ஆர்வம் கொண்ட அவர் ஊழலுக்கு, எதிராகவும் கருப்பு பணத்திற்கு எதிராக போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி இருக்கிறார். டெல்லியில் 2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் அவர் நடத்திய போராட்டம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதே நேரத்தில் பல நேரங்களில் அவர் மீது சர்ச்சை வளையங்களும் சூழ்ந்து இருக்கிறது. வரி ஏய்ப்பு செய்தது. தடை செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்தது, போலி பாஸ்போர்ட், ஆயுதச் சட்டம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் பாபா ராம்தேவ் மீதும் அவரது பார்ட்னரான ஆச்சாரியா பாலகிருஷ்ணா மீதும் உள்ளது.

மிகப்பெரிய சர்ச்சை
இந்நிலையில்தான் தற்போது மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார் பாபா ராம்தேவ். கடந்த வெள்ளிக்கிழமை தானேவில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசின் மனைவி அம்ருதா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் எம்பியுமான ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ்,"பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள் சல்வார் உடையிலும் அழகாக பெண்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை என் பார்வையில் அவர்கள் ஒன்றுமே அணியாமல் இருந்தாலும் அழகாக இருக்கிறார்கள்" எனக் கூறினார்.

ஆடையில்லா பெண்கள்
இது இந்திய அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பெண்கள் அமைப்புகளும் பாபா ராம்தேவுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். உச்சமாக டெல்லியில் ராம்தேவின் புகைப்படத்திற்கு செருப்பு மாலையும் அணிவிக்கப்பட்டது. ஒரு துணை முதல்வரின் மனைவி முன்னால் முதல்வரின் மகன் முன்னால் பெண்கள் குறித்து பேசி இருப்பது பெண்களை புண்படுத்தும் செயல் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் தலைவர் சுவாதி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

மகளிர் ஆணையம் சம்மன்
இதனிடையே பெண்களின் கவுரவத்தை கண்ணியத்தை குலைக்கும் வகையில் அநாகரிகமாக பேசிய பாபா ராம்தேவுக்கு எதிராக மகாராஷ்டிரா மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாபா ராம்தேவ் தனது பேச்சு குறித்த விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் மகாராஷ்டிரா மகளிர் ஆணைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அம்மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சாகங்கர் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். இதனால் பாபா ராம்தேவுக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படுவாரா எனவும் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications