விதவித ஆடையில் கேமரா முன் போஸ்.. பிரதமர் மோடியின் பலவீனத்தை அறிந்து சீனா அட்டாக்.. விடாத சு.சாமி!
டெல்லி: போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும், விதவிதமாக ஆடைகள் அணிந்து கொள்வதிலும் பிரதமர் மோடி ஆர்வமாக இருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த பலவீனத்தை 2018 சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிந்து கொண்டு எல்லையில் அட்டாக் செய்து வருகிறார் என பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியா -சீனா இடையே தொடர்ந்து எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இந்தியாவின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்கும் முனைப்பில் சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே மோதி வருகிறது. சமீப காலமாக மோதல் இல்லாமல் இருந்தது.
கடந்த 2020ல் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்கள் மோதிக்கொண்டனர். அதன்பிறகு தற்போது மீண்டும் இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதி கொண்டுள்ளனர்.

எல்லையில் மோதல்
அதன்படி அருணாச்சல பிரதேச எல்லையில் தவாங் செக்டார் பகுதியில் உள்ள யங்ங்ட்சி எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே கடந்த 9 ம் தேதி இந்தியா-சீனா வீரர்கள் மோதி கொண்டுள்ளனர். இதில் இரு நாடுகளின் வீரர்களும் காயமடைந்துள்ளனர். இந்த பகுதியில் ஆயுதங்களுடன் 200 சீன வீரர்கள் கையில் ஆயுதங்கள், கட்டைகளுடன் இந்தியாவுக்குள் அத்துமீற முயன்றனர். இதையடுத்து இந்திய வீரர்கள் 50 பேர் அவர்களை எதிர்த்து விரட்டினர். தவாங் செக்டார் எல்லைப்பகுதியில் இந்தியா - சீனா இடையே எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுவதில் சர்ச்சை உள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லையை வெவ்வேறு பகுதிகளாக வரையறுத்துள்ளன. இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் விளக்கம்
இந்நிலையில் தான் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு நேற்று தான் இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியானது. இந்தியா-சீனா இடையேயான மோதலை மத்திய அரசு மறைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தொடங்கின. மேலும் தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பதால் அங்கு விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி இன்று ராணுவ பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளித்தார்.

ராஜ்நாத் சிங் கூறியது என்ன?
அதன்படி, ‛‛கடந்த 9 ம் தேதி தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். இது நம்நாட்டின் வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சீனாவுக்கு ராஜாங்க ரீதியிலும் தகவல் அளிக்கப்பட்டது. எல்லைகளை பாதுகாக்க நமது படைகள் உறுதியாக உள்ளன. இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. படுகாயமும் அடையவில்லை. இருநாடுகளின் கமாண்டோக்கள் தலையீட்டால் வீரர்கள் தங்கள் நிலைக்கு திரும்பினர். அதன்பிறகு விதிகளின்படி இருநாடுகளின் கமாண்டோக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எல்லையில் அமைதியை நிலைநாட்ட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது'' என்றார்.

சுப்பிரமணியன் சாமி விமர்சனம்
இந்நிலையில் தான் இந்தியா-சீனா எல்லை பிரச்சனை, இருநாட்டு வீரர்கள் இடையேயான மோதல் தொடர்பாக பிரதமர் மோடியை, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை செய்துள்ளார். அதில் சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடியின் பலவீனம்
2018 ம் ஆண்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த வேளையில் பிரதமர் மோடியின் பலவீனங்களை ஜி ஜின்பிங் அறிந்து கொண்டார். அதாவது கேமரா முன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் இருக்கும் ஆர்வம், விதவிதமாக ஆடைகள் அணிந்து சந்தோஷப்படுவது, சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்ப்பது உள்ளிட்டவற்றின் மூலம் பிரதமர் மோடியின் பலவீனங்களை ஜி ஜின்பிங் தெரிந்து கொண்டார். இதன்மூலம் உலகத்தில் அதிகாரத்தை பெறுவதற்கான முக்கோண போட்டியில் இந்தியாவை வீழ்த்த ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார்.

நேருவுக்கு ஏற்பட்டத்தை போல்
சீனா விவகாரத்தில் 1962ம் ஆண்டில் பிரதமராக இருந்த நேரு மோசமான வார்த்தைகளால் விமர்ச்சிக்கப்பட்டார். பிரதமர் மோடியையும் அதேபோல் தான் விமர்சனம் செய்ய வேண்டுமா?. கடந்த 1962ல் ஜனசங்கம் நேருவை கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால் இன்றைய எதிர்க்கட்சிகளின் நிலை என்னவாக இருக்கிறது?. நேருக்கு ஏற்பட்டதை போல் பிரதமர் மோடிக்கு நடக்குமா?.

சீனாவுடன் மோடி நெருக்கம்
முதல்வராக இருந்து தற்போது பிரதமராக மாறியுள்ள நரேந்திர மோடி சீனாவை சேர்ந்தவர்களுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இந்த வேளையில் அமைச்சர்கள் ஏன் நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும்'' என சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியா-சீனா இடையேயான விவகாரத்தில் பிரதமர் மோடியை, சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை அவர் விமர்சனம் செய்துள்ளார்.

1962ல் நடந்தது என்ன?
முன்னதாக கடந்த 1960 காலக்கட்டத்தில் இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவியது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார். சீனா விவகாரத்தில் மக்கள் சோசியலிச கட்சி, சுதந்திர கட்சி, லோஹியா சோசியலிஸ்டுகள், ஜன சங்க கட்சியினர் என அனைவரும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் 1962ல் கல்வானில் நடந்த சண்டை இந்தியா-சீன போருக்கு வழிவகுத்தது. 1962ம் ஆண்டு வரை ஜன சங் தலைவராக இருந்த தீனதயாள் உபாத்யாயா மற்றும் அப்போதைய ஜன சங்க கட்சியின் இளம் தலைவராக உருவாகி வந்த அடல் பிகாரி வாஜ்பாயும் நேருவுக்கு எதிராக குரலெழுப்பி கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனை தான் தற்போது சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications