இடம்பெயர் தொழிலாளர்கள்... ராணுவத்தை அனுப்பி உதவ கோரி தர்ணா- டெல்லியில் யஷ்வந்த் சின்ஹா கைது
டெல்லி: இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கு ராணுவத்தை அனுப்பி உதவி செய்ய கோரி போராட்டம் நடத்திய முன்னாள் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கைது செய்யப்பட்டார்.
கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் லாக்டவுனால் இடம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் துயரம் தேசத்தையே உலுக்கி வருகிறது. உடைமைகளோடும் உறவுகளோடும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சொந்த மண்ணை நோக்கி அகதிகளாக செல்லும் இடம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பேரவலம் நெஞ்சை தகிக்க வைக்கிறது.

இந்த நிலையில் டெல்லி ராஜ்காட் பகுதியில் முன்னாள் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா திடீரென போராட்டம் நடத்தினார். இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்ப ராணுவத்தை பயன்படுத்தி உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து யஷ்வந்த் சின்ஹா தர்ணா போராட்டம் நடத்தினார்.
அவருடன் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து யஷ்வந்த் சின்ஹாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், இடம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசு என்பது ஏழைகளுக்கு எதிரானது. வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் இந்தியர்களை அழைத்து வர முடிகிறது. ஆனால் சொந்த நாட்டில் தொழிலாளர்களை சாலைகளில் நடக்க விடுகிறார்கள் என சாடினார்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. திலீப் பாண்டே கூறுகையில், ஒரு நாளைக்கு 20,000 ரயில்களை நம்மால் இயக்க முடியும். ஒரு நாளைக்கு 2.3 கோடி பேர் ரயிலில் பயணிக்கிறார்கள். இதை இப்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications