மோடி வீட்டுக்கு போன யோகி ஆதித்யநாத்.. 1 மணி நேரம் அனல் பறந்த ஆலோசனை.. பர்த் டே உள்ளிட்ட சர்ச்சை ஓவர்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் டெல்லியில் மோடியை அவரது இல்லத்தில் யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Recommended Video
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக பாஜகவிற்குள் ஒரு கோஷ்டி செயல்பட ஆரம்பித்துள்ளது.
அடுத்த சட்டசபை தேர்தலின்போது வேறு முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தலாமா என்று அவர்கள் ஆலோசனை கூறத் தொடங்கியுள்ளனர். போதாத குறைக்கு கொரோனா நோய்த்தொற்றை யோகி ஆதித்யநாத் சிறப்பாக கையாளவில்லை, கங்கை நதியில் நோயாளிகள் பிணங்கள் மிதந்து சென்றதால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு உள்ளது என்பது போன்ற சர்ச்சைகள் அவரைச் சுற்றி வளைத்துள்ளன. யோகி ஆதித்யநாத் தாகூர் சமூகத்துக்கு அதிகம் ஆதரவுடன் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

புது முகம் வருகை
இந்த நிலையில்தான் காங்கிரசிலிருந்து விலகிய ஜிதின் பிரசாதா சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார் . இவர் உத்தர பிரதேசத்தில் பரவலாக உள்ள பிராமண சமுதாயத்தினர் மத்தியில் பிரபலமானவர். செல்வாக்கு கொண்டவர். எனவே இவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து விடுவார்களோ என்ற அச்சம் யோகி ஆதித்யநாத் ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிறது.

பாஜக குழு ஆய்வு
போதாத குறைக்கு, பாஜக சீனியர் தலைவர் சந்தோஷ் தலைமையில் மத்திய குழு சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் சென்று அங்கு, மாநில அமைச்சர்கள், பாஜகவைச் சேர்ந்த, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரிடம் முதல்வரின் செயல்பாடு பற்றி கருத்து கேட்டது. இப்படி ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் கடந்த வாரம் யோகி ஆதித்யநாத் பிறந்தநாள் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் யோகி ஆதித்யநாத்திற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது இவர்கள் இடையே கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்துள்ளதா, முதல்வர் வேட்பாளரை மாற்றுவதற்கான சிக்னலா என்றெல்லாம் அரசியல் விமர்சகர்களால் கருத்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

அமித் ஷா, மோடியுடன் சந்திப்புகள்
இந்த நிலையில் நேற்று டெல்லி வந்திருந்தார் யோகி ஆதித்யநாத். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று அவர் ஜேபி நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டுக்கு சென்று அங்கு ஆலோசனையில் ஈடுபட்டார். அமித்ஷாவுடன் நேற்று சுமார் 90 நிமிடங்கள் யோகி ஆதித்யநாத் பேசிய நிலையில் மோடியுடன் இன்று சுமார் 60 நிமிடங்கள் அதாவது ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார் யோகி ஆதித்யநாத்.

என்ன பேசினார்கள்
இதன்மூலம் இரு தலைவர்கள் இடையே கருத்து வேற்றுமை இருப்பதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துதல், ஜிதின் வருகையினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications