குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் வாதம்
டெல்லி: குஜராத்தின் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு ரயில் எரிக்கப்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட 59 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த கலவரம் நடந்தபோது தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அப்போது குஜராத் முதல்வராக இருந்தார்.
இந்த வன்முறையின் பின்னணியில் நரேந்திர மோடி மற்றும் உயரதிகாரிகள் இருந்ததாகக்கூறி வழக்கு தொடரப்பட்டது. இதனால் சிறப்பு புலனாய்வுக் குழு நரேந்திர மோடி மற்றும் 63 பேர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இல்லை என கடந்த 2012-ம் ஆண்டு நரேந்திர மோடி உள்ளிட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட எஹ்சான் ஜாஃப்ரி என்பவரது மனைவியான ஜக்கியா ஜாஃப்ரி என்பவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் 2017-ம் ஆண்டு இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ஜக்கியா ஜாஃப்ரி தரப்பில் 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதன் மீதான விசாரணை தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது ஜாகியா ஜாஃப்ரி தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜாகியா ஜாஃப்ரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். ''இது சட்டம் ஒழுங்கு, நிர்வாகத் தோல்வி தொடர்பானது. காவல்துறையின் செயலற்ற தன்மையால் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்... எந்த உயர் அதிகாரிகளையும் பற்றி எனக்கு கவலை இல்லை'' என்று வாதாடப்பட்டது. ''குஜராத் கலவரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, ஏராளமான ஆதாரங்களை புறக்கணித்து, எந்த விசாரணையும் இன்றி முடிவுகளை எடுத்துள்ளது''
காவல்துறையின் அலட்சியத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள் இருந்தனர். நீதிமன்றங்கள் எதுவும் இப்பிரச்னையை கவனிக்கவில்லை என்றால் மக்கள் எங்கே போவார்கள்? நீதிமன்றம் என்ன செய்கிறது என்பதன் அடிப்படையில் குடியரசு நிற்கிறது அல்லது வீழ்ச்சியடைகிறது ... இந்த குடியரசு வேறு வழியைப் பார்க்க முடியாத அளவுக்கு பெரியது'' என்று ஜாகியா ஜாஃப்ரி சார்பில் வாதாடினார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்.