உணவின்றி கஷ்டப்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள்.. தக்கநேரத்தில் உதவிய செந்தில்குமார் எம்பி..குவியும் பாராட்டு
தருமபுரி: உணவின்றி வாடும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் சர்க்கஸ் கலைஞர்கள் கேட்ட உதவியைச் செய்து கொடுத்த திமுக தருமபுரி எம்பி செந்தில்குமாரை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உழைக்கும் வர்க்கத்தினர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
|
கொரோனா பாதிப்பு
இருந்தாலும்கூட கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு நாம் செல்ல இன்னும் நீண்ட நெடுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் தற்போது அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் சினிமா துணை நடிகர்கள், சர்க்கஸ் கலைஞர்கள், இசைக் கச்சேரி நடத்துபவர்கள் எனப் பலரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அவர்களுக்குப் பலரும் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகின்றனர்.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 19, 2021 |
ந கலைஞர்கள்
இந்நிலையில், விராலிமலை பகுதியைச் சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் சிலர் உதவி கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் அவர்கள், "நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- செல்லம்பட்டியில் வசிக்கிறோம். இங்கு மொத்தம் 34 சர்க்கஸ் கலைஞர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றோம். கடந்த 1.5 ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாக எந்த ஊரிலும் எங்களால் சர்க்கஸ் தொழிலை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி வீடுகளிலேயே முடங்கியுள்ளோம். உணவுகூட இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம்" என்று கூறியுள்ளனர்.
உதவி தேவை
அந்த வீடியோவில் தங்கள் அற்புதமான சர்க்கஸ் திறமையை வெளிப்படுத்தியுள்ள அவர்கள், மக்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான வீடியோ ட்விட்டரிலும் பகிர்ந்தனர். இந்நிலையில் ட்விட்டரில் அஜ்மல் என்பவர், கொரோனாவால் வறுமையில் சிக்கியுள்ள சர்க்கஸ் கலைஞர்களுக்கு உதவும்படி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, எம்பி செந்தில் குமார், சட்டசபை உறுப்பினர் டிஆர்பி ராஜா ஆகியோர் டேக் செய்து ட்வீட் செய்திருந்தார்.
செந்தில் குமார்
திமுக தருமபுரி எம்பி செந்தில் குமார் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். இந்த ட்வீட்டை பார்த்ததும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பணம் அனுப்பி உதவியுள்ளார் செந்தில் குமார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை- செல்லம்பட்டியில் வசிக்கும் சர்க்கஸ் கலைஞர்களை தொடர்புகொண்டு, அவர்கள் கேட்டதற்கு இணங்க அங்கு வாழும் 30 சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ12,000 செலுத்தப்பட்டது" என பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் உதவுவதில்லை
தக்க நேரத்தில் உதவிய செந்தில்குமார் எம்பியை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேநேரம் சிலர், திமுகவைச் சாராதவர்களுக்கும் பிரபலமில்லா ட்விட்டர் கணக்குகளிலிருந்து வரும் உதவிகளுக்கும் செந்தில்குமார் உதவுவதில்லை என்றும் அவர் அனைத்து கோரிக்கைகளையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும் என்றும் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.
பதில்
இதற்கு சர்க்கஸ் கலைஞர்களுக்கு உதவும்படி ட்வீட் செய்த அந்த அஜ்மல் என்ற நபர் பதிலளித்துள்ளார். தனது ட்விட்டரில் வெறும் 20 பலோயர்ஸ் மட்டுமே இருப்பதாகவும் இருப்பினும் சர்க்கஸ் கலைஞர்களுக்குத் தான் கேட்ட உதவியை செந்தில்குமார் எம்பி செய்து கொடுத்ததாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த சர்க்கஸ் கலைஞர்கள் செந்தில்குமாரின் தருமபுரி தொகுதியைச் சேர்ந்தவர்களாக இல்லாதபோதும் உதவியதாகப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.