தடை போட ஐடியா கேட்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்! போகிற போக்கில் போட்டு தாக்கிய எடப்பாடி? என்னவாம்?
தருமபுரி : பல உயிர்களை பலி கொண்ட ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டிய நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பதற்காக மக்களிடம் கருத்துக் கூட்டம் நடத்தும் ஒரே முதல்வர் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் எரிமலையாய் வெடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அடுத்தடுத்து சட்ட போராட்டங்கள் அறிக்கைகள் நிர்வாகிகள் நியமனம் என நெருக்கடி கொடுத்து வருகிறார் ஓ பன்னீர்செல்வம்.
ஆனால் அதனை எல்லாம் கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதோடு தற்போது திடீரென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
எங்க ஏரியாவில் ஆட்டமா? உங்க ஏரியாவில் என்ன நடக்குதுனு பாருங்க! அட்டாக்கை ஆரம்பித்த எடப்பாடி & கோ..!
எடப்பாடி பழனிச்சாமி
நேற்று முன்தினம் பழனியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இன்று இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர். தொடர்ந்து தர்மபுரி அதிமுக அலுவலகம் அருகே எம் ஜி ஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அழித்துவிட முடியாது
பின்னர் அங்கு திரண்டு இருந்த தொண்டர்களிடையே உரையாற்றிய அவர்," மக்களின் அருள் ஆசியோடும் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்களோடு வழிகாட்டுதலுடன் அதிமுகவின் மிக உயர்ந்த பதவியான இடைக்கால பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். துரோகிகளும் அதிமுக இயக்கத்துக்கு எதிரானவர்களும் அதிமுகவை அழித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார்கள். ஒருபோதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிட முடியாது. இது வலிமையான இயக்கம் மக்கள் ஆதரவோடு இருக்கும் பலமான இயக்கம்.
துரோகிகள்
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். எந்த பொய்யான வழக்கின் மூலமும் கட்சியை கெடுக்க நினைத்தால் திமுக கட்சி காணாமல் போய்விடும். அதிமுகவில் இருந்த சில துரோகிகள் திமுகவுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்கள். அவர்களது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. தற்போது நான் இருக்கும் தர்மபுரி மாவட்ட மக்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஓகேனக்கல் நீரேற்றும் திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் திமுக அரசு மக்களுக்கு பயன் இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை.
விடியா திமுக அரசு
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் மக்களை திமுக அரசு வஞ்சித்து வருகிறது. தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி மக்களையும் விவசாயிகளையும் விடியா திமுக அரசு வஞ்சித்துள்ளது. தனக்கு வருமானம் வேண்டும் தன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் எண்ணம். அதேபோல தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து உள்ளது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் எங்கும் கிடைக்கும் நிலை உள்ளது.
ஒரே முதல்வர்
பல உயிர்களைப் பலி கொண்ட ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பால் அந்தச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் நிச்சயம் ஒழித்தே ஆக வேண்டும். ஆனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பதை விட்டுவிட்டு முதல்வர் ஸ்டாலின் கருத்து கேட்டு கூட்டம் நடத்துகிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் ஒரே முதல்வர் இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும்தான்" என கடுமையாக விமர்சித்தார்.