ஆரம்பிக்கலாங்களா.. 2000 ஆடு, 5000 கோழி..! மணமணத்த முத்தழகுபட்டி! சாதி மதமில்லாமல் கூடிய மக்கள்!
திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகுபட்டியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு 2000 ஆடுகள், 5000 கோழிகள் ஒன்றாக சமைத்து ஒரு லட்சம் பேருக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் முத்தழகுபட்டியில் பழமையான புனித செபாஸ்தியார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த 31ஆம் தேதி துவங்கிய திருவிழா வருகின்ற 3ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும். இந்த ஆலயம் 300 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

புனித செபஸ்தியார்
ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் புனித செபஸ்தியாருக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக அன்று கோவில் மைதானத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக செபஸ்தியார் உருவம் பொறித்த கொடி தாரை, தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் முத்தழகுபட்டியில் உள்ள தெருக்களின் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

ஆடி திருவிழா
இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதனை அடுத்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. திருவிழாவை முக்கிய நாளான இன்று பல்வேறு பக்தர்கள் காணிக்கையாக 2000 மேற்பட்ட ஆடுகள் மற்றும் 5000-க்கும் மேற்பட்ட கோழிகளை வழங்கினர்.

3 ஆயிரம் ஆடுகள்
இவை மட்டுமல்லாமல் 300 ஆயிரம் கிலோ அரிசி, 5 டன் காய்கறிகள் ஆகியவற்றை ஒன்றாக சமைத்து ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக அதனை சமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் பக்தர்கள் வழங்கியதுடன், சமையல் செய்யும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சமையல் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

மெகா அசைவ அன்னதானம்
இரவு 7 மணிக்கு மெகா அசைவ அன்னதானம் தொடங்கும் நிலையில் காலை 5 மணி வரை அன்னதானம் விடாமல் நடக்கும். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஜாதி மத பேதமின்றி பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம் இந்த விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications