திமுக ஆட்சியில் எங்களுக்கே பாதுகாப்பு இல்லை... குமுறும் அதிமுக முன்னாள் அமைச்சர்
திண்டுக்கல்: திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் , சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி தான் என முன்னாள் அமைச்சரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோதவாடி குளம் நேற்று நிரம்பியதை அடுத்து வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, குளத்தின் கரையில் உள்ள அம்மன் கோயிலில் 101 பெண்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிடும் நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும், அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் சீனிவாசன்
இந்நிலையில் திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் , சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி தான் என முன்னாள் அமைச்சரும் , அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்தில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் சீனிவாசன், ஜனநாயக முறைப்படி தமிழகம் முழுவதும் 40 மாவட்டங்களில் அதிமுக உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி
நடந்து வருகிறது என்றார்.

திமுக மீது குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது எனவும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு அவர்களது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் எனவும், இதனை கண்டு அதிமுகவினர் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்றார்.

அதிமுக பொதுசெயலாளர்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலை மறைவு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதால் அதை பற்றி எதுவும் கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்த திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவைப் பொறுத்தவரை பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு விட்டது எனவும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிமுக இரட்டை தலைமைதான் உள்ளது என்றார்.

முன்னாள் அமைச்சர்களுக்கே பாதுகாப்பு இல்லை
அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தி காலணியை வீசியுள்ளதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன் தற்பொழுது அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் அவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக தான் மாறிவிட்டது எனவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications