வைர கவசமே கொடுக்கலாமே! ஓபிஎஸ் தேவரின் வாரிசா? வெள்ளிக் கவசத்தை யார் கேட்டது? கொந்தளித்த அதிமுக மாஜி!
திண்டுக்கல் : ஓ.பன்னீர்செல்வம் தான் திருடிய பணத்தில் வைரத்திலேயே கவசம் அளிக்கலாம் ஆனால் அதைவிட கேவலமாக உங்களிடம் யார் வெள்ளிக்கவசம் கேட்டது என திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் பழனி சாலையில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட நடிகை விந்தியா மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அதிமுகவின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன்
அப்போது பொதுமக்கள் மத்தியில் மேடையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்," தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்க தேவருக்கு அம்மா அவர்கள் கொடுத்த தங்க கவசத்தை மாட்டுவதற்கு நமக்கு உரிமை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். குறுக்கு வழியிலே அதற்கான வேலைகளை செய்திருக்கிறார்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை.

வெள்ளிக் கவசம்
ஆனால் அம்மா அவர்கள் கொடுத்த தெய்வீக பொன் கவசத்தை முத்துராமலிங்கருக்கு சாத்தப்பட வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. அம்மா கொடுத்த அந்த தெய்வீக பொன் கவசம் முத்துராமலிங்கத் தேவருக்கு போய் சேர வேண்டும் என எடப்பாடி அவர்கள் கூறினார். ஆனால் நேற்று நடைபெற்ற குருபூஜை விழாவில் வெள்ளியிலே கவசத்தை கொடுத்து ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையிலே நான் வழங்குகிறேன் என துரோகி சொல்லி இருக்கிறார்" என ஓ.பன்னீர் செல்வத்தை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

கொள்ளையடித்த பணம்
மேலும் 'அம்மா கொடுத்த தங்கத்திற்கு ஈடு வேறு என்ன இருக்கிறது? எண்ணத்திற்கு வெள்ளியில் கொடுக்கிறாய். கொள்ளையடித்த பணத்தில் வைரத்தில் ஆவது கொடு. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சாத்தப்பட்டு இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தைப் போன்று முத்துராமலிங்கத் தேவருக்கும் தான் திருடிய பணத்தில் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் வைரத்தில் கவசத்தை வழங்கு.

வைரத்திலேயே கவசம்
ஆனால் தற்பொழுது அதைவிட கேவலமாக வெள்ளியிலே முத்துராமலிங்க தேவருக்கு கவசம் வழங்க வேண்டும் என உங்களிடம் யார் கேட்டது நீங்கள் என்ன தேவருக்கு வாரிசா? என பேசினார். அதிமுக சார்பில் வெள்ளிக் கவசம் வழங்கியதால் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கூறி வரும் நிலையில், ஓபிஎஸ் சமூகத்தை சேர்ந்தவரான திண்டுக்கல் சீனிவாசன் அவரை ஒருமையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications