பெண் போலீசையே சீண்டி வினை.. இன்ஸ்பெக்டர் வீரகாந்தி உங்களுக்கு வேலையில்லை.. டிஸ்மிஸ்.. டிஐஜி அதிரடி
பெண் காவலரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளான கீரனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல்: பயிரை காப்பதற்காக போடப்படும் வேலிகளே அந்த பயிரை மேய்ந்த கதைகள் இப்போது நடக்கின்றன. காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கே இப்போது பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை காக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் தனக்கு கீழே பணிபுரியும் பெண் காவலர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. கீரனூரில் பெண் காவலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முதன் முறையாக விசாகா கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட அந்த இன்ஸ்பெக்டரின் பெயர் வீரகாந்தி என்பதாகும். அவரது பெயருக்கும் செய்த செயலுக்கும் சம்பந்தமே இல்லாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. பழனியில் வசித்து வந்த வீரகாந்தி, கடந்த 2021ஆம் ஆண்டு கீரனூரில் காவல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தனது காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் காவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தார்.
இதனையடுத்து வீரகாந்தி உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பின்னர் துறை ரீதியான விசாரணை நடத்த, அப்போதைய ஏடிஎஸ்பி லாவண்யா நியமிக்கப்பட்டார். புகார் அளித்த பெண் காவலர், அவருடன் பணிபுரிந்த காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் வீரகாந்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வீரகாந்தி தனது செல்போனில் வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்களை பெண் காவலருக்கு அனுப்பி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வீரகாந்தி தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விசாரணை அறிக்கையானது விசாகா கமிட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக விசாகா கமிட்டி நடத்திய ஆய்வில், ஆய்வாளர் வீரகாந்தி மீதான புகார், உண்மை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்குமாறு விசாகா கமிட்டி பரிந்துரைத்தது. அறிக்கையும் தமிழக அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் வீரகாந்தியை டிஸ்மிஸ் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ்குமார் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் விசாகா கமிட்டியின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைக்கு உள்ளான முதல் காவல் ஆய்வாளர் வீரகாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரகாந்தி திண்டுக்கல் மதுவிலக்கு மற்றும் எஸ்.பி. தனிப்படை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளார். பாலியல் புகாரில் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications