பார்த்தீங்களா கூட்டத்தை? தென் மண்டலத்தை மிரளவிட்ட எடப்பாடி! ஓபிஎஸ்க்கு பறந்த மெசேஜ்! இவ்வளவு செலவா?
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு நத்தம் விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசனால் அளிக்கப்பட்ட நிலையில் இலட்சக்கணக்கில் செலவு செய்து 5000க்கும் மேற்பட்டோர் திரட்டப்பட்டதாகவும் இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போதும் சரி அதற்கு பின்னதாக எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்ற போது திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோயிலில் சென்று சுவாமி தரிசனம் செய்ததில்லை.
சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களுக்காகவும், கோடை விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பலமுறை பழனி வந்த போதிலும் ஒருமுறை கூட பழனி மலைக்கோயில் சென்று முருகப்பெருமானை தரிசித்ததில்லை.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சாடிய எடப்பாடி! அமைச்சர் மா.சு-க்கு வந்ததே கோபம்! சுளீர் பதிலடி
எடப்பாடி பழனிச்சாமி
பொதுவாக அரசு பதவியில் இருப்பவர்கள் பழனி மலைக்கோவிலில் சென்று தரிசனம் செய்வது வழக்கம் தான் என்றாலும் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் பழனி மலை கோயிலுக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பழனி மலைக்கோவில் வர எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்ட நிலையில் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. குறிப்பாக ஓபிஎஸ் இபிஎஸ் பிளவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தஞ்சமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தற்போது ஒன்றாக இணைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பிரம்மாண்ட ஏற்பாடுகள்
மாவட்ட எல்லையான தொப்பம்பட்டியில் இருந்து பழனி வரை சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையின் இரு புறங்களிலும் அதிமுக கொடிகள் தோரணங்கள் பிளக்ஸ் பேனர்கள் என வரும் வழியெல்லாம் மாஸ் காட்டினார்கள். மேலும் பழனி நகரம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் போஸ்டர்கள் என ஜொலி ஜொலித்தன. இரவு 8 மணிக்கு எடப்பாடி வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்கு மணியிலிருந்து பழனியில் அதிமுகவினர் குவிக்கப்பட்டனர். குறிப்பாக பழனியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் என்றாலே அது நத்தம் விசுவநாதனின் கட்டுப்பாட்டில் அதிமுக அமைப்பு மாவட்டம் என்பதால் சற்று கூட்டம் குறைவாகவே இருக்கும்.
திரண்ட கூட்டம்
ஆனால் இம்முறை திண்டுக்கல் சீனிவாசனும் நத்தம் விஸ்வநாதனும் ஒன்றாக இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். இரண்டு நாட்களாக பழனியில் முகாமிட்டிருந்த அவர்கள் ஏற்பாடுகளை துரிதப்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து 'நன்கு கவனிக்கப்பட்டு' 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக பல குத்து பாடல்களை போட்டு மகிழ்ச்சி சற்றும் குறையாமல் பார்த்துக் கொண்டனர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி வந்தபோது 300 பெண்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
மகிழ்ச்சி
இதுவரை பழனிச்சாமி பிரச்சாரத்திற்காக பலமுறை பழனி வந்திருந்தாலும் இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில்லை. இதனால் மிகவும் உற்சாகமடைந்த அவர் பயணம் முடியும் வரை மகிழ்ச்சியாகவே இருந்தார். அந்த அளவுக்கு ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தார்கள் முன்னாள் அமைச்சர்கள். ஏற்கனவே துணை முதலமைச்சராகவும் முதல்வராகவும் இருந்த ஓபிஎஸ் பழனி மலை கோயிலுக்கு அடிக்கடி வருவார். ஆனால் அவரை உள்ளூர் நிர்வாகிகள் தவிர யாரும் சந்தித்தது கிடையாது. வழக்கமான பயணம் தான் என திண்டுக்கல் சீனிவாசனும் நத்தம் விஸ்வநாதன் கருதியதே இதற்கு காரணம்.
ஓபிஎஸ் அதிருப்தி
ஆனால் எடப்பாடி அதிமுகவின் முகமாக முன்னிறுத்தப்பட்டு வரும் இந்த நேரத்தில் அவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை இருவரும் செய்தனர். கூடவே ஆர்பி உதயகுமார் சேர்ந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமியின் பழனி பயணம் சுபமாகவே முடிந்தது என்கின்றனர் அதிமுகவினர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பழனியில் திரண்ட கூட்ட குறித்த தகவல்கள் ஓபிஎஸ் தரப்புக்கு சென்றதாகவும், தனக்கு ஆதரவாக இருந்தவர்கள் தற்போது தனக்கு எதிராக திரும்பி இவ்வளவு கூட்டத்தை கூட்டியுள்ளார்களா என அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.