அண்டர்டேபிள் டீலிங்..கைநீட்டிய அதிகாரிக்கு கம்பி! பிரேம்குமாரை மாட்டிவிட்ட செந்தில்குமார்! பரபர பழனி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் கட்டிட ஒப்பந்ததாரரிடம் இருந்து 18ஆயிரம் ரூபாய் லஞ்சம்பெற்ற போது செயற்பொறியாளர் பிரேம்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கோவில் சார்பாக கட்டிடம் கட்டிய நிலையில், பில் தொகையை தர லஞ்சம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், பாதுகாப்பு, துப்புரவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக, பழனி முருகன் கோவிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பழனி முருகன் கோவில் மட்டுமல்லாது அதன் கட்டுப்பாட்டில் பல உப கோயில்களும் இருக்கிறது. அந்த கோவில்களிலும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரிய நாயகி அம்மன் கோவில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களுக்கு ஏற்பாடுகளும் வசதிகளும் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பிலேயே செய்யப்படுகிறது.
அப்படி ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் பணிக்கு உரிய தொகையை வழங்க லஞ்சம் கேட்ட அதிகாரி தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டன்சத்திரம் பழனி சாலையில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திருமண மண்டபத்தை கட்ட செந்தில்குமார் என்கிற ஒப்பந்ததாரர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்பந்தம் செய்து திருமண மண்டபத்தை கட்டி வருகிறார்.
இந்நிலையில் ஒப்பந்ததாரர் செந்தில்குமாருக்கு திருமண மண்டபம் கட்டிட பணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் 21 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்டிட பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் செந்தில்குமாருக்கு தரவேண்டிய பணத்திற்கான காசோலையை பெற கோவிலில் பணிபுரியும் கட்டிட பிரிவு செயற்பொறியாளர் பிரேம்குமார் என்பவரிடம் பலமுறை அணுகியுள்ளார்.
இந்நிலையில் கொடுக்கவேண்டிய தொகைக்கு ஒரு சதவிகிதம் லஞ்சம் தர வேண்டும் என பிரேம்குமார்
தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ஒப்பந்ததாரர் செந்தில்குமார் புகார் தெரிவித்துள்ளார். இதை அடுத்து இன்று ஒப்பந்ததாரர் செந்தில்குமார் திருக்கோவில் அலுவலகத்திற்கு சென்று செயற்பொறியாளர் பிரேம்குமாரிடம் 18000 ரூபாய் பணம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.
அதை பிரேம்குமார் பெற்றுக் கொண்டபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிரேம்குமாரை பிடித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்வதாக தெரிவித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகின்றது. பழனி கோவிலில் நடைபெற்ற கட்டிடப் பணிக்கு லஞ்சம் பெற்ற போது செயற்பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications