மாந்த்ரீகம்! பசுவை வெட்டி பலி? கலகலத்த காங்கிரஸ் ஆபிஸ்! ஜேசிபியோடு வந்த போலீஸ்! நடந்தது என்ன?
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாடு புதைக்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் புகார் எதிரொலியாக, வருவாய் துறையின் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டி எடுத்து எலும்பு மற்றும் சதை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஸ்பென்சர் காம்பவுண்ட் திருவள்ளுவர் 1வது தெருவில் ராஜா முகமது என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.
இந்த வீட்டை மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ராஜா முகமது கடந்த 2018 ஆம் ஆண்டு வாடகைக்கு விட்டுள்ளார். முறையாக வாடகை கொடுத்து வந்த மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் கொரோனாவிற்கு பின் சரியாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர்
வாடகை தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது பலமுறை மணிகண்டனிடம் கேட்டும் பணம் தரவில்லை. இது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது மாந்திரீகம் செய்து பசு மாட்டை வீட்டில் புதைத்துள்ளதாகவும் அதே போல் உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என மணிகண்டன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு
புகாரின் பேரில் போலீசார் 429 மிருக வதை தடை சட்டம், 508 மிருகங்களைக் கொன்று புதைப்பது, மற்றும் 506/1 என்ன மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ரமேஷ் பாபு தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு முன்னிலையில் போலீசார் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மாடு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர்.

மாதிரிகள் சேகரிப்பு
பின்னர் புதைக்கப்பட்ட மாட்டின் எலும்பு மற்றும் சதை ஆகியவற்றை ஆய்வுக்காக கால்நடை மருத்துவர் குழு எடுத்துச் சென்றது. மருத்துவர்கள் வழங்கக்கூடிய அறிக்கையை தொடர்ந்து அங்கு புதைக்கப்பட்டது காளைமாடா அல்லது பசுமாடா என்பது தெரிய வரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உண்மை என்ன?
இதனிடையே காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன் தரப்பில் அவரது கார் ஓட்டுநர் சுப்பிரமணி என்பவர் ஜல்லிக்கட்டு கன்று குட்டி ஒன்றை வளர்த்து வந்ததும் அந்த கன்று குட்டிக்கு ஒரு வயது உடைய நிலையில் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டது அதை அப்பகுதியில் வீட்டில் உரிமையாளருக்கு தகவல் கொடுத்த பிறகு புதைத்ததாகவும் கூறுகின்றனர். எனினும் போலீசாரின் முழு விசாரணை மற்றும் மருத்துவ குழுவில் பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக கிடைத்த பிறகு தான் மாந்திரீகம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா அல்லது இயற்கை மரணம் எய்திய நிலையில் புதைக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவரும்.












Click it and Unblock the Notifications