திண்டுக்கல் சி.பி.எம். வேட்பாளராக மறைந்த இடதுசாரி தலைவர் என். வரதராஜன் மகன் கல்யாணசுந்தரம் போட்டி?
சென்னை: திண்டுக்கல் சட்டசபை தொகுதி சி.பி.எம். வேட்பாளராக மறைந்த முதுபெரும் இடதுசாரி தலைவர் என். வரதராஜன் மகன் கல்யாணசுந்தரம் போட்டியிடக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
புதுச்சேரியில் பரிதாபம்... அதிமுகவை விழுங்கும் பாஜக- 3 தொகுதிகள்தான் தர முடியுமாம்
இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. 6 தொகுதிகளிலும் வேட்பாளருக்கான வாய்ப்பு உள்ளவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி மாநில குழு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
என்.வி.என். மகனுக்கு வாய்ப்பு?
திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் மறைந்த முதுபெரும் இடதுசாரி தலைவரும் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான என். வரதராஜன் மூத்த மகன் கல்யாணசுந்தரம் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
3 முறை எம்.எல்.ஏ. N.Varadarajan.jpg
1967-ம் ஆண்டு வேடசந்தூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. வாகவும் 1977, 1980 தேர்தல்களில் திண்டுக்கல் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியவர் என். வரதராஜன். 2001-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 3 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகவும் பணியாற்றினார் என்.வி.என் என்கிற என். வரதராஜன்.
நகர்மன்ற துணைத் தல்லைவர்
அருந்ததியிருக்கான 3% உள் ஒதுக்கீட்டுக்காக என்.வரதராஜன் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்தே திமுக அரசு அருந்ததியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியது. என். வரதராஜனின் மூத்த மகன் கல்யாணசுந்தரம் திண்டுக்கல் நகர் மன்ற துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.
பாலபாரதிக்கு வாய்ப்பா?
திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக திகழ்ந்தவர் பாலபாரதி. மார்க்சிஸ்ட் கட்சி விதிப்படி 4-வது முறையாக போட்டியிட முடியாது என்பதால் 2016 தேர்தலில் பாலபாரதிக்க் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போதைய தேர்தலில் பாலபாரதிக்காக கட்சி விதிகளை தளர்த்தி போட்டியிட அனுமதித்தாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் மார்க்சிஸ்ட் வட்டாரங்கள்.