கொடைக்கானல் ட்ரிப் போறீங்களா.. அப்ப இதை கொண்டுபோக மறக்காதீங்க.. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய உத்தரவு
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு 7,000-ஐ நெருங்கி விட்டது.
ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையின் நிலை மிக மிக மோசமாக உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கிடுகிடுவென உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது கொரோனா.

ஊரடங்கு
நிலைமை இப்படி இருக்க வேறு வழியின்றி ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கையில் எடுத்தது. தமிழகத்தில் நேற்று இரவு முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வார இறுதி நாள் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கின்போது மட்டும் அரசு, தனியார் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுட்டது.

சுற்றுலாதலங்களுக்கு செல்லலாம்
கடந்த காலங்களில் ஊரடங்கின்போது சுற்றுலாதலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலாதலங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம். ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையை பின்பற்றி ஆக வேண்டும்.

மலைகளின் இளவரசி
தமிழகத்தின் மிக பிரபலமான சுற்றுலாதலமான 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் இறுகியுள்ளன.

இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம்
இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழை காட்டினால்தான் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு ஏரியில் படகு சவாரி செய்வதற்கும், பூங்காக்களுக்கு செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும். இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியாக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications