மோடியை எதிர்த்தீங்கல்ல.. இப்போ பாருங்க.. ராகுலுக்கு கோபேக் சொல்வோம்.. அர்ஜுன் சம்பத் கொந்தளிப்பு
திண்டுக்கல்: தமிழ்நாடு திராவிட பூமி அல்ல, இது தேசிய பூமி என்பதை விரைவில் நிரூபிப்போம் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும்போது, பல்வேறு அரசியல் கட்சிகளால் ட்விட்டரில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, ஒருமுறை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக விமான நிலையம் தொடங்கி, ஐஐடி வளாகம் வரை கோ பேக் மோடி என்று கோஷமிடப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வானில் கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த எதிர்ப்பு ஆயுதத்தை அண்மைக் காலமாக பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் கையில் எடுத்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றபோது கோ பேக் ஸ்டாலின் என்று ட்விட்டரில் ட்ரெண்டானது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. அதேபோல் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அர்ஜூன் சம்பத் பேட்டி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் கூறுகையில், கொரோனா என்ற கொடிய நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் கொரோனா பரவல் இந்தியாவில் தடுத்து நிறுத்தப்பட்டு, தற்போது விரட்டி அடிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்
தொடர்ந்து, தமிழகத்தில் மதுக் கடைகளை எதிர்த்தவர்களை தற்போது காணமுடியவில்லை. மதுபான விற்பனையால்தான் மாநில அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என நிதி அமைச்சர் கூறுகிறார். வாரிசு அரசியலை ஒழிக்க பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை எழுச்சியுடன் போராடி வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்று தெரிவித்தார்.

கோபேக் ராகுல்
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவர் பாதயாத்திரை தொடங்கும்போது அவருக்கு எதிராக 'கோபேக் ராகுல்' இயக்கத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும்.

3வது முறையாக மோடி
இந்தியாவில் ஒரே நாளில், ஒரே தேர்தல் என்ற நடைமுறை வர வேண்டும். மோடியின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும். தமிழகம் திராவிட பூமி அல்ல, தேசிய பூமி என்பதை விரைவில் நிரூபிப்போம். வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக வருவார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications