ஜொலி ஜொலித்த புர்ஜ் கலிபா.. "ஹேப்பி பர்த்டே.." 4வது வருடமாக வண்ணமயமான வாசகம்.. யாருக்காக தெரியுமா?
துபாய்: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் அவரது புகைப்படங்கள் வண்ணமயமாக ஒளிரவிடப்பட்டது. தொடர்ந்து 4-வது ஆண்டாக துபாய் புர்ஜ் கலிபாவில் அவரது படம் ஒளிரவிடப்பட்டது.
உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா துபாயில் உள்ளது. இந்த கட்டிடம் 828 மீட்டர் உயரம் கொண்டது.
அதாவது 2 ஆயிரத்து 717 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது மிளிரவிடப்படும்.

துபாய் புர்ஜ் கலிபா கட்டிடம்
வானுயர நிமிர்ந்து நிற்கும் இந்த கட்டிடத்தில் ஒளி வெள்ளத்தில் பின்னணி இசையுடன் ஓடவிடப்படும் காட்சிகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். அந்த வகையில், அண்மையில் வெளியான விக்ரம் படத்தின் டிரெய்லர் கூட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ஓட விடப்பட்டது. அதேபோல், முக்கிய பிரபலங்களின் பிறந்த நாளை கொண்டாடவும் பிரத்யேக ஏற்பாட்டின் பேரில் புர்ஜ் கலிபாவில் பிறந்த நாள் கொண்டாடும் பிரபலங்களின் படங்களும் மிளிர விடப்படும்.

மெய்மறந்து ரசித்த ரசிகர்கள்
அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு புர்ஜ் கலிபா நேற்று ஷாருக்கான் படத்துடன் ஒளிவெள்ளத்தில் மிதந்தது. "ஹப்பி பர்த்டே ஷாருக்கான்... வி லவ் யூ என்ற மேசேஜுடன்" புர்ஜ் கலிபா கட்டிடம் மிளிர்ந்தது. அப்போது தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே என்ற படத்தில் உள்ள பிரபலமான "துஜே தேகா தோ" பாடலும் ஒலிபரப்பானது. இதை அங்கிருந்த ஷாருக்கான் ரசிகர்கள் மெய்மறந்து ரசித்தனர்.

ஷாருக்கான் பிறந்தநாள்
பலர் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ஷாருக்கான் பிறந்த நாளை ஒட்டி இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இது முதல் தடவை கிடையாது. ஏற்கனவே 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் இதே போன்று ஷாருக்கான் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தற்போது 4-வது முறையாக புர்ஜ் கலிபா கட்டிடம் ஷாருக்கான் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துடன் மிளிர்ந்தது.

பாலிவுட் பாட்ஷா
இது தொடர்பான காட்சிகளை ஷாருக்கான் ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக பாலிவுட் பாட்ஷா என்று கொண்டாடப்படும் ஷாருக்கான் நேற்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடினார். ஷாருக்கானின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று அவர் நடித்துள்ள பதான் படத்தின் டீசர் வெளியானது. சினிமா பிரபலங்கள் பலரும் ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வந்தனர்.

அன்புக்கடல் என்னை சூழ்ந்துள்ளது
ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது ரசிகர்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். அதேபோல், ஷாருக்கான் வீட்டின் முன் ரசிகர்கள் கூட்டமும் திரண்டது. இதையடுத்து ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான் வாழ்த்தை ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்த ஷாருக்கான், "பிறந்த நாளில் அன்புக்கடல் என்னை சூழ்ந்துள்ளது. என்னை மிகவும் ஸ்பெஷலாக உணரவைத்த உங்களுக்கு நன்றி" என பதிவிட்டு ரசிகர்கள் திரண்டு இருந்தபடி எடுத்துக்கொண்ட செல்பியையும் பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications