இதுதான் தோனி.. யாருக்கு வேண்டும் பணம்.. ஒரு பைசா கூட வாங்காத 'மென்டர்'.. நெகிழும் கங்குலி
துபாய்: இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு மென்டர் பதவியேற்க தோனி பிசிசிஐயிடம் ஊதியம் பெறவில்லை என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 17ம் தேதி முதல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில், 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது.
இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
பண்ண முடியாதுன்னு சொன்னாங்க.. தமிழில் உருகிய உத்தப்பா.. போட்டிக்கு முன் தோனி எடுத்த முடிவு- பின்னணி
கேப்டனாக சிறப்பான செயல்பாடு
முதலாவது உலக கோப்பை கிரிக்கெட் டி20 போட்டித் தொடரை இந்தியா வென்றபோது அதன் கேப்டனாக செயல்பட்டவர் தோனி. சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட மூளையாக இருந்து செயல்படுபவரும் தோனி. எனவே அவருக்கு ஆலோசகர் பதவி வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கங்குலி பேட்டி
இந்த நிலையில்தான், ஒரு முக்கிய தகவலை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மென்டர் பதவிக்காக தோனி ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று கூறியுள்ளார்.
Recommended Video
வெற்றிகரமான கேப்டன்
இந்தியா கண்ட வெற்றிகரமான கேப்டன்களில் முதலிடத்தில் இருக்கிறார் தோனி. 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011ல் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பை ஆகியவற்றை இந்திய கிரிக்கெட் அணி பெற்றது தோனி தலைமையில்தான்.
சிஎஸ்கே போட்டிகள்
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்ட நிலையில், சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஆடி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியிலும் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
விளம்பர வருவாய்
அதேநேரம், தோனி நிறைய விளம்பரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு நிறைய வருவாய் கிடைக்கிறது. தோனி களத்தில் நிற்கும் நேரத்தை விட விளம்பரத்தில் வரும் நேரம் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவற்றை விட்டு விட்டு, இந்திய டி20 அணிக்காக ஆலோசகராக செயல்பட ஒப்புக் கொண்டதோடு, அதற்காக ஊதியம் வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
இனிமையாக பழகுவார்
கேப்டன் விராட் கோலி கோபப்படுவதாக ரஹானே, புஜாரா போன்றோர் பிசிசிஐயிடம் புகார் அளித்ததாக தகவல் உண்டு. ஆனால் அனைத்து வீரர்களிடமும் சிரித்த முகத்தோடு பழகக் கூடியவர் தோனி. அனைத்து வீரர்களும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். எனவே ஆலோசகராக அவர் செயல்படும்போது, சொன்ன சொல்லை அனைவரும் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் தோனிக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.