பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்- டெல்லியில் பிறந்து பாக். சர்வாதிகாரியானவர்!
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்.
துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் (வயது 79) உடல்நலக் குறைவால் காலமானார்.
1943-ம் ஆண்டு டெல்லியில் ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி பிறந்தவர் பர்வேஸ் முஷாரப் (பர்வேஸ் முஷரஃப்). 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பர்வேஸ் முஷாரப் குடும்பம் இடம் பெயர்ந்தது.
துபாய்க்கு தப்பிய முஷாரப்- "தலைமறைவு" என பாக். கோர்ட் பிரகடனம்- 30 நாளில் கைது செய்யவும் உத்தரவு!!
1964-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்து அதன் தளபதியாகவும் உயர்ந்தார். 1998-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவி வகித்தார். அப்போது பொருளாதார நெருக்கடி, காஷ்மீர் விவகாரம் என பல்வேறு நெருக்கடிகளில் நவாஸ் ஷெரீப் சிக்கித் தவித்தார்.
அந்த சூழலில் பர்வேஸ் முஷாரப்பை ராணுவ தளபதி பதவியில் இருந்து நீக்க நவாஸ் ஷெரீப் முயற்சித்தார். ஆனால் முஷாரப்போ, நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார். பின்னர் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக, புதிய அதிபரானார் முஷாரப்.
2007-ம் ஆண்டு பாகிஸ்தான் தலைமை நீதிபதி முகம்மது செளத்ரியை பதவி நீக்கம் செய்தார் முஷாரப். இதனைக் கண்டித்து பாகிஸ்தானில் உள்நாட்டு கிளர்ச்சி வெடித்தது. மேலும் இஸ்லாமிய மதகுருக்கள் ஷரியா சட்டத்தை அமல்செய்ய முயற்சிப்பதாக கூறி இஸ்லாமாபாத் லால் மஸ்ஜித் மீது முஷாரப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இதில் 100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனாலேயே பாகிஸ்தானில் தலிபான்கள் உருவாகினர்.
2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட நவாஸ் ஷெரீப் மீண்டும் நாடு திரும்பினார். அப்போது தமது பதவி காலத்தையும் அவசர நிலையையும் நீட்டிக்க முஷாரப் முயற்சித்தார். 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் முஷாரப் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் தமது பதவியை ராஜினமா செய்துவிட்டு பாகிஸ்தானை விட்டே தப்பி ஓடினார் முஷாரப்.
லண்ட, துபாய் என ஓடிக் கொண்டிருந்த முஷாரப், 2013-ல் மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய போது கைது செய்யப்பட்டார். அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. பெனாசீர் பூட்டோ படுகொலை உட்பட பல தேச துரோக வழக்குகள் முஷாரப் மீது பாய்ந்தன. பின்னர் துபாய்க்கு முஷாரப் தப்பி ஓடினார். 2019-ம் ஆண்டு முஷாரப்புக்கு தேசதுரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் உடல்நலக் குறைவால் முஷாரப் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று முஷாரப் காலமானார்.
இந்தியாவுடனான கார்கில் யுத்தத்துக்கு காரணமானவர் முசாரப். 2001-ம் ஆண்டு இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் ஆக்ராவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் முஷாரப் பங்கேற்றார்.